அமைச்சர் மகன் விபத்தில் மரணமடைந்ததால் அரசு எடுத்த திடீர் முடிவு..!
அமைச்சரின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவத்தின் அடிப்படையில் விபத்துக்களை குறைக்க புதிய நடவடிக்கை எடுக்கவுள்ளது ஆந்திர அரசு. இது குறித்த தகவல்களை காணலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர அரசின் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் பி.நாராயணாவின் மகன் நிதிஷ் நாராயணா (வயது 23) ஹைதராபாத் நகரில் நள்ளிரவில் தன் சொகுசுக் காரில் அதிவேகமாக சென்ற போது மெட்ரோ ரயில் பாலத் தூணில் மோதியதில் மரணடைந்தார்.

இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, தொடர்கதையாகி வரும் சொகுசுக் கார் விபத்துக்கள் அதி தீவிர பிரச்சனையாக தற்போது உருவெடுத்துள்ளது. (சென்னையில் கூட அதிகமான சொகுசுக்கார் விபத்துகள் நடந்து வருவது இங்கு நினைவுகூறத்தக்கது)
அதிக வேகம் கொண்ட வெளிநாட்டு கார், மோட்டார்சைக்கிள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுவது ஒருபுறம் அதிகரித்து வருகிறது.

ஆனால் அதிவேகம் கொண்ட வாகனங்கள் ஓட்டுவதற்கு ஏற்ப இந்திய சாலைகள் தரம் கொண்டது தானா என்றால் நிச்சயம் கிடையாது என்பதே நிதர்சனமாக உள்ளது. இந்திய சாலைகள் பலவும் அதிகபட்சமாக 100கிமீ அல்லது அதற்கு கீழான வேகத்தில் செல்லத்தக்க வகையிலேயே உள்ளன.

இப்படிப்பட்ட சாலைகளில் 200 கிமீ மற்றும் அதற்கு மேற்பட்ட வேகம் கொண்ட வாகனங்களை ஓட்டினால் என்னவாகும்? அதிலும் இளைஞர்கள் கையில் கிடைத்தால் சொல்லவே வேண்டாம்.

இது தொடர்கதையாகவே இருந்து வரும் நிலையில், அமைச்சர் மகன் மரணமடைந்த சம்பவத்திற்கு பிறகு ஆந்திர அரசு இதில் அதிக அக்கறையுடன் செயல்படத் துவங்கியுள்ளதாக தெரிகிறது.

ஆந்திர மாநிலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசுப் பேருந்துகள் அதிகமாக இயங்குவதால் வால்வோ, பென்ஸ், ஸ்கேனியா போன்ற பேருந்து நிறுவனங்களை தொடர்பு கொண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டை குறைக்க வலியுறுத்தப் போவதாக ஆந்திராவின் துணை போக்குவரத்து துறை கமிஷனர் வெங்கடேஷ்வர ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் போதே இந்த வாகனங்களின் வேகத்தை குறைத்து தயாரிக்கவும் வலியுறுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாகனங்களை தயாரிக்கும் நிறுவனம், அதனை வாங்குபவர்களுக்கு தங்கள் வாகனத்தின் உச்சவரம்பு வேகம் குறித்து சான்றிதழும் அளிக்க வேண்டும் என்றும், சாலைகளில் ஆங்காங்கே வேகத்தை அளக்கும் கருவி மூலம் வாகனத்தின் வேகத்தை கணக்கிடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும் வெங்கடேஷ்வர ராவ் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வாகனங்களின் உச்சவரம்பு வேகமும் மணிக்கு 80 கிமீ ஆகவும், பள்ளி வாகனங்களின் வாகன வேகம் 60கிமீ ஆகவும் குறைக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படாத வாகனங்களுக்கு பதிவுகளை புதுப்பிக்கவும் முடியாது என்றும் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது.

வாகன வேகத்தை அளக்கும் கருவிகள் அதிகமாக கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வெங்கடேஷ்வர ராவ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக அமைச்சர் மகனின் மரணத்திற்கு பின்னதாக விபத்துக்களை குறைக்கும் முயற்சியில் ஆந்திர அரசு முனைப்பு காட்டிவருவது குறிப்பிடத்தக்கது..


Click it and Unblock the Notifications








