பெட்ரோல், டீசல் வண்டிகளின் கதை முடிகிறது! திடீர் முடிவை எடுத்த அரசு! எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வைக்க அதிரடி!
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு தற்போது மிகவும் தீவிரமாக எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில், 1,000 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அரசின் உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மாநில அரசின் இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து எரிசக்தி துறை செயலாளர் சுரேஷ் குமார் கூறுகையில், ''எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதால், மக்கள் அவற்றை வாங்குவதில்லை. அத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், மக்கள் அவற்றை வாங்க தயங்குகின்றனர்'' என்றார். எனவே மக்கள் மத்தியில் உள்ள தயக்கத்தை தகர்த்து எறியும் வகையில்தான், அடுத்த 2 ஆண்டுகளில் 1,000 சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவுவதற்கு மேற்கு வங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
நான்கு லேன்களை கொண்டு நெடுஞ்சாலைகளில், ஒவ்வொரு 25 கிலோ மீட்டருக்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனை அமைப்பதற்கு மேற்கு வங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் நகர பகுதிகளில், மூன்று சதுர கிலோ மீட்டர்களுக்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு முன் வருவார்கள் என மேற்கு வங்க மாநில அரசு அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
காற்று மாசுபாடு பிரச்னைக்கு காரணமாக உள்ள வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பொதுமக்கள் மாறும்பட்சத்தில், மேற்கு வங்க மாநிலத்தின் சுற்றுச்சூழலும் காக்கப்படும் என அரசு நம்புகிறது. மேற்கு வங்க மாநில அரசு மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதைதான் விரும்புகின்றன. எனவே அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் அவை முடுக்கி விட்டுள்ளன.
பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே வரும் ஆர்வம் காரணமாகவும், மத்திய, மாநில அரசுகளின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாது, சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் கூட அதிக ஆர்வம் காட்டுகின்றன. இந்த துறையில் சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் செயல்பாடு, பெரிய நிறுவனங்களையே பிரம்மிக்க வைக்கும் வகையில் உள்ளது. இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையை பொறுத்தவரையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த ஆதிக்கத்தை அதிகரித்து கொள்ளும் வகையில், நானோ காருக்கு மீண்டும் உயிர் கொடுக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது டாடா நானோ காரை எலெக்ட்ரிக் அவதாரத்தில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டால், இந்திய மக்களுக்கு மிகவும் குறைவான விலையில் ஒரு எலெக்ட்ரிக் கார் கிடைக்கும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டுமல்லாது, ஹூண்டாய், எம்ஜி ஆகிய நிறுவனங்களும் இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. ஹூண்டாய் மற்றும் எம்ஜி ஆகிய 2 நிறுவனங்களும் ஏற்கனவே முறையே கோனா மற்றும் இஸட்எஸ் ஆகிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி கொள்ள எலெக்ட்ரிக் கார் சந்தையில் புதிய அறிமுகங்களை செய்ய அவை தயாராகி கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








