ஒவ்வொரு ஊரிலும் ரேஸ் டிராக் திறந்தால்...?!
உலகின் அபாயகரமான சாலைகள் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் குறிப்பிடப்படுகிறது. நகர்ப்புறம், நெடுஞ்சாலை என இரண்டிலும் விதிமீறல்கள், அலட்சியம், கவனக்குறைவு காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். நம் நாட்டில் ஓட்டுனர் உரிமம் வழங்கும் நடைமுறையால், பயிற்சி இல்லாத, சாலைப் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்து வருகிறது.
இதுபோன்ற ஓட்டுனர்களால் சாலைப்பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் இருந்து வருவதை தடுக்க முடியவில்லை. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த பல கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான, வரைவு மசோதாவையும் விரைவில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
இது ஒருபுறம் இருந்தாலும், சாலையை பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் சுயக்கட்டுப்பாடு அவசியம். சாலை விபத்துக்களில் தற்போது பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் நடத்தும் இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழந்து வரும் செய்திகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துதாக அமைந்திருக்கிறது. இதனை தவிர்ப்பதற்கான வழி குறித்த சில தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

உயிருக்கு ஆபத்து
இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் ஒரு கலாச்சாரம் பெட் கட்டி பொதுச் சாலைகளில் ரேஸ் செல்வதுதான். வாகனங்கள் நெருக்கமாக செல்லும் சாலைகளில் கூட இந்த ரேஸ்களை நடத்தி தங்களது திறமையை நிரூபிக்க உயிரை பணயமாக வைக்கின்றனர். இதுபோன்று நடைபெறும் பந்தயங்களால் பிற வாகனங்களில் வருவோர்க்கும், பாதசாரிகளின் உயிருக்கும் பெரும் ஆபத்து ஏற்படுகிறது.

பலனில்லை
"Speed Thrills But Kills" போன்ற எச்சரிக்கை வாசகங்களும், காவல்துறையினரின் முயற்சிகளும் இதுபோன்ற சட்டவிரோத பந்தயங்களை தடுக்க முடியாத அவல நிலை இருக்கிறது. இவர்களுக்கு சரியான வடிகால் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது.

அவசியம்
இதுபோன்ற விபத்துக்களை குறைக்கவும், சாலை பாதுகாப்பை அதிகரிக்கவும், ஒவ்வொரு ஊரிலும் ரேஸ் டிராக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினால் இதுபோன்ற விபத்துக்களை கணிசமாக குறைக்க வாய்ப்பு ஏற்படும். ஆனால், அங்கு கட்டணம் அதிகம் என்பதும், நினைத்த நேரத்தில் செல்ல முடியாது என்ற நிலையும் இருக்கிறது.

சிறிய ரேஸ் டிராக்
மேலை நாடுகளில் ஒவ்வொரு நகரிலும் ஒரு ரேஸ் டிராக் கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், பரந்து விரிந்த நம் நாட்டில் இதுபோன்ற ரேஸ் டிராக்குகள் விரல் விட்டு எண்ணும் விதத்திலேயே உள்ளது துரதிருஷ்டவசம். பெரு நகரங்களிலும், இரண்டாம் நிலை நகரங்களிலும் சிறிய அளவிலான ரேஸ் டிராக்குகளை அமைத்து, குறைவான கட்டணத்திலோ அல்லது இலவசமாக பயன்படுத்தும் வகையில், அனுமதித்தால் அது நிச்சயம் பயன் தருவதாக அமையும். இதற்காக, சிறப்பு நிதி ஒதுக்கீடும் அவசியம்.

விழிப்புணர்வு பிரச்சாரம்
பொதுச் சாலைகளில் ரேஸ் நடத்துவதில் இருக்கும் அபாயங்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளையும் இந்த ரேஸ் டிராக்குகளை கொண்டு மேற்கொள்வதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அத்துடன், ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கு முன்னதாக சிறப்பான ஓட்டுனர் பயிற்சியை வழங்குவதையும் கட்டாயமாக்குவதும் அவசியமாகிறது. உள்ளூர் நட்சத்திரங்களை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டால் பலன் கிடைக்கும்.

ஆர்வத்தை தூண்டலாம்
குறைவான கட்டணத்தில் ரேஸ் டிராக்குகளில் கார், பைக்குகளை ஓட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தினால், நிச்சயம் இளைஞர்களின் ஆர்வத்தை தூண்ட முடியும். மேலும், ரேஸ் டிராக்குகளில் வேகமாகவும், பாதுகாப்பாகவும் பைக், கார்களை ஓட்டுவதற்கான வாய்ப்பாகவும் இளைஞர்களுக்கு அமையும்.


Click it and Unblock the Notifications








