பிரதமராகும் மோடியின் அதிகாரப்பூர்வ கார் சுதேசியா, விதேசியா?!
மோடி... இப்போது வரை ஸ்கார்ப்பியோதான்... எப்போது பிஎம்டபிள்யூ? என்ற தலைப்பில் ஒரு செய்தியை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். பிரதமர் பதவியை ஏற்றவுடன் அவர் ஸ்கார்ப்பியோவைவிட்டு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பிஎம்டபிள்யூ காருக்கு மாறுவாரா என்பதை சில தினங்களில் பார்ப்போம் என்ற கேள்வியுடன் அந்த செய்தியை முடித்திருந்தோம்.
குஜராஜ் முதல்வராக பொறுப்பேற்றது முதல் நீண்ட காலமாக புல்லட் ப்ரூஃப் வசதி கொண்ட மஹிந்திரா ஸ்கார்ப்பியோவைத்தான் ஆஸ்தான வாகனமாக மோடி பயன்டுத்தி வருகிறார். இந்த நிலையில், நாட்டின் புதிய பிரதமராக அரியணையில் அமர உள்ள நரேந்திர மோடி எந்த காரை பயன்படுத்தப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மீடியாக்கள் தற்போது கையிலெடுத்துள்ளன.
பிரதமருக்காக விசேஷ அம்சங்கள் கொண்டதாக பயன்படுத்தப்பட்டு வரும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காருக்கு மாறுவாரா அல்லது ஸ்கார்ப்பியோவை தொடர்ந்து பயன்படுத்துவாரா என்ற கேள்விகளுடன் மீடியாக்கள் காத்திருக்கின்றன.
இந்தநிலையில், புதிய பிரதமருக்காக ஸ்கார்ப்பியோ எஸ்யூவியை அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக மேம்படுத்தி தர தயார் என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா விருப்பம் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராகும் மோடி ஸ்கார்ப்பியோவையே தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்துக்கும் அது பெருமை சேர்க்கும் விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கான கார்கள்
கடந்த 2003ம் ஆண்டு வரை அம்பாசடர் கார்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தப்பட்டு வந்தது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் கருதி, அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட 6 பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் லிமோசின் ரக சொகுசு கார்களும், பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினருக்காக 12 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவிகளும் வாங்கப்பட்டன.

பாதுகாப்பு அம்சங்கள்
பிரதமருக்காக பயன்படுத்தப்படும் பிஎமட்பிள்யூ 7 சீரிஸ் கார்கள் அதிக சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு மற்றும் கண்ணி வெடி தாக்குதல்களில் கூட சேதமடையாத வகையில் கட்டமைப்பை பெற்றுள்ளன. ரன் ஃப்ளாட் டயர்கள், குண்டு வெடிப்பு தாக்குதல்களின்போது தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், செயற்கைகோள் தகவல் தொடர்பு சாதனம் போன்ற வசதிகள் உள்ளன.

ஏற்றுக்கொள்வாரா?
புதிய பிரதமராகும் மோடிக்கும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகம் உள்ளது. எனவே, அவர் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பிஎம்டபிள்யூ காரை அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால்...
இருப்பினும், பிரதமருக்கான அம்சங்களுடன் புதிய ஸ்கார்ப்பியோ கார்களை கட்டமைத்து வாங்கி அவர் தொடர்ந்து பயன்படுத்துவார் என்ற கருத்தும் நிலவுகிறது.

பிரதமருக்கான பாதுகாப்பு அம்சங்கள்
ஒருவேளை, மோடி ஸ்கார்ப்பியோவை பயன்படுத்த விரும்பினால், பிரதமருக்கான பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக ஸ்கார்ப்பியோவை மேம்படுத்தி தருவதற்கு தயாராக இருக்கிறோம். பிரதமரின் காருக்கான பாதுகாப்பு நிலைகள் மற்றும் கட்டமைப்பு குறித்து சிறப்பு பாதுகாப்புப் படையினரிடமும் விபரங்கள் கேட்டு, கட்டமைத்து தருவோம். அதற்கான வசதிகள் எங்களிடம் உள்ளது. அதிக சக்தி வாய்ந்த எஞ்சினையும் ஸ்கார்ப்பியோவில் பொருத்தி தரலாம். என்று மஹிந்திராவின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயாங்கோவும் தெரிவித்துள்ளார்.

;சின்ன டவுட்டு...
மோவாடோ கைக்கடிகாரம், புல்காரி மூக்கு கண்ணாடி, மோன்ட்பிளாங்க் பேனா போன்ற பிரபலமான வெளிநாட்டு பிராண்டு பொருட்களை நரேந்திர மோடி பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே, கார் விஷயத்தில் அவர் சுதேசியா அல்லது விதேசியா என்பதை காண்பதற்கு ஆட்டோமொபைல் துறையினரும், பொதுமக்களிடமும் ஆவல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








