டெஸ்லா கார் மீது ஏறி போராட்டம் நடத்திய பெண்... ஷாங்காய் ஆட்டோ ஷோவில் பரபரப்பு!
ஷாங்காய் ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட டெஸ்லா எலெக்ட்ரிக் காரின் கூரை மீது ஏறி இளம்பெண் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக அளவில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் மீது தனி மதிப்பு இருந்து வருகிறது. செயல்திறன், தொழில்நுட்பத்தில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் முன்னோடியாகவும், புரட்சிக்கு வித்திட்ட மாடல்களாவும் கருதப்படுகின்றன.

இந்த சூழலில், தற்போது டெஸ்லா நிறுவனத்திற்கு நேரம் சரியில்லை போலும். அந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் சில விபத்தில் சிக்கி வருவதுடன், அதற்கு ஆட்டோபைலட் எனப்படும் டிரைவரில்லாமல் இயங்கும் தொழில்நுட்பம் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில், ஷாங்காய் ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த டெஸ்லா மாடல் எஸ் கார் மீது இளம்பெண் ஒருவர் திடீரென ஏறி நின்று டெஸ்லாவுக்கு எதிராக முழக்கமிட்டு எதிர்ப்பை பதிவு செய்தார். Tesla Brake Lost Control என்று அவர் முழக்கமிட்டார். அவர் அணிந்திருந்த டீ ஷர்ட்டில் கூட Brake Lost Control என்று எழுதப்பட்டு இருந்தது.

பெண் ஒருவர் கார் மீது ஏறி முழக்கமிட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆட்டோ ஷோவிற்கு வந்தவர்கள் இந்த பெண்ணின் செய்கையை பார்த்து திகைப்பில் ஆழ்ந்தனர். காரின் கூரை மீது நின்று முழக்கமிட்ட அப்பெண்ணை அங்கிருந்த பாதுகாவலர்கள் கீழே இறக்க முற்பட்டனர்.

ஆனால், அதற்கு அசங்கவில்லை. மேலும், குடைகளால் அப்பெண்ணின் டீ ஷர்ட்டில் இருந்த வாசகத்தை மறைக்க முயன்றனர். ஆனால், அப்பெண் ஆவேசமாக குடைகளை பிடுங்கி எறிந்துவிட்டு தொடர்ந்து முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஒருவழியாக அவரை கீழே இறக்கி பாதுகாவலர்கள் அழைத்து சென்றனர். அவர் கைது செய்யப்பட்டாரா அல்லது இந்த செய்கைக்காக அபராதம் எதுவும் விதிக்கப்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை.
போராட்டம் நடத்திய பெண் டெஸ்லா மாடல் எஸ் காரின் உரிமையாளர் என்றும், விபத்தில் சிக்கியபோது அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கு டெஸ்லா மாடல் எஸ் காரின் பிரேக் சிஸ்டம் சரியில்லாததே காரணம் என்று கூறி அப்பெண் போராட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், விபத்தில் சிக்கிய அந்த காரில் எந்த பிரச்னையும் இல்லை என்று டெஸ்லா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பெண் தொடர்ந்து இதுபோன்று டெஸ்லாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








