காஷ்மீரீல் கட்டப்பட்டு வரும் ஈஃபில் டவரை மிஞ்சும் உலகின் உயரமான ரயில்வே பாலம் பற்றிய முழு தகவல்கள்..
உலகிலேயே மிகவும் உயரமான ரயில்வே பாலம் காஷ்மீரில் கட்டப்பட்டு வருகிறது. அது குறித்த தகவல்களை காணலாம்.
1.20 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இருப்பு பாதை கொண்ட உலகின் நான்காவது பெரிய ரயில்வே என்ற பெருமை பெற்றது இந்திய ரயில்வேதுறை.

இந்திய ரயில்வே தற்போது எழில்கொஞ்சும் காஷ்மீர் மாநிலத்தில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை கட்டி வருகிறது.

இமாலய மலைத்தொடரில் அமைந்துள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஓடும் செனாப் நதி மீது இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.

செனாப் நதி மீது இந்தப் பாலம் கட்டப்படுவதால் நதியின் பெயரையே இந்த பாலத்திற்கும் வைத்துவிட்டனர். இது செனாப் பாலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பாலம் செனாப் நதியின் நிலத்தடி மட்டத்திலிருந்து 359 மீட்டர்கள் உயரம் உள்ளது.

தற்போது உலகிலேயே உயரமான ரயில்வே பாலம் என்ற பெருமை பெற்றது சீனாவில் உள்ள 275 மீ உயரம் கொண்ட ஷீய்பாய் பாலமே.

ஷீய்பாய் பாலத்தைக் காட்டிலும் காஷ்மீரில் உள்ள செனாப் பாலம் 84 மீட்டர்கள் கூடுதல் உயரம் கொண்டதாக இருக்கும்.

இது பாரிசில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஈஃபில் டவரைக் காட்டிலும் 35 மீட்டர்கள் கூடுதல் கொண்டதாக உள்ளது. (ஈஃபில் டவர் என்பது 81 அடுக்குகள் கொண்ட கட்டிடத்திற்கு சமமானதாகும்)

செனாப் பாலம் 1.3 கிமீ நீளமும், 359மீட்டர்கள் உயரமும் கொண்டதாகும். 24,000 டன் இரும்பு கொண்டு கட்டப்பட்டு வரும் இந்த பாலம் 1,110 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

இந்தப் பாலமானது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில்வே திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது ஜம்முவில் உள்ள காத்ரா மற்றும் ஸ்ரீநகரில் உள்ள காவ்ரி ஆகிய நகரங்களை இணைக்க உள்ளது.

2009ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் 2002 ஆம் ஆண்டில் இந்த பாலத்திற்கான கட்டுமானப்பணிகள் துவங்கியது.

எனினும், தீவிரவாதிகளில் அச்சுறுத்தல் மிக அதிகமாக இருக்கும் அம்மாநிலத்தில் கட்டப்படும் இந்த பாலத்தின் மீதான நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சந்தேகம் எழுந்ததால் டிசம்பர் 2009ல் இந்த பாலத்தின் கட்டுமானப்பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் இந்த பாலத்தின் கட்டுமானப்பணியானது 2010ஆம் ஆண்டில் மீண்டும் துவக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டில் இந்த பாலத்தின் கட்டுமானம் நிறைவுபெறும். 2019 முதல் இதில் ரயில் போக்குவரத்து துவக்கப்படும் என்று ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய கட்டுமானத்துறையின் தரத்தை பறைசாற்றும் வகையில் இந்த உலகின் உயரமான ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது.

மலைகள் நடுவே எழில் கொஞ்சும் ரயில்வே பாதைகளை அமைத்துள்ள கொங்கன் ரயில்வே இந்த பாலத்திற்கான கட்டுமானப் பணிகளை தலைமையேற்று நடத்தி வருகிறது.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த பாலத்தில் குண்டுவெடிப்பை தாங்கும் 63 மிமீ தடிமன் கொண்ட உயர் ரக ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதே போல பாலத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களும் குண்டுவெடிப்பை தாங்கும் வகையிலான உயர்ரக கான்கிரீட் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

மேலும் மிகவும் குறைந்த அளவு வெப்பநிலை நிலவும் காஷ்மீரில் குறைந்தபட்ச குளிரையும், காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்கும் வகையிலும் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.

இதே போல இந்த பாலத்திற்கு துருப்பிடிக்காத வகையில் விஷேச பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயிண்டானது 15ஆண்டுகள் தாக்கும்பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த பாலத்தை கண்காணிக்க விஷேச தொழில்நுட்ப வசதிகளை மத்திய அரசு நிர்மானித்துள்ளது.

மேலும், கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த முறையில் இயங்குமான்லைன் எச்சரிக்கை சிஸ்டம் ஒன்றும் இந்த பாலத்தில் பொருத்தப்பட உள்ளது.

செனாப் பாலத்தில் காற்றின் வேகத்தை கண்கானிக்கும் சென்சார்கள் பொருத்தப்பட உள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 90 கிமீ என்ற அளவைக் கடந்தால்..

இதில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் மூலம் ரயில் பாதைகள் முழுவதும் சிவப்பு நிற ஒளி பாய்ச்சப்படும். இது ரயில் ஓட்டுநர்களை எச்சரிக்கை செய்யும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செனாப் ரயில்வே பாலம் குறித்து விளக்கும் வீடியோவை மேலே காணுங்கள்..


Click it and Unblock the Notifications








