ட்ரிப்பிள் டெக்கர் ஹைட்ரஜன் விமானம்... அட, இத இதத்தான்யா எதிர்பார்க்கிறோம்...!!
மாற்று எரிபொருளில் இயங்கும் தரைவழி போக்குவரத்துக்கான வாகனங்களை வடிவமைப்பதற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதேவேளை, இதற்கான முயற்சிகள் வான்வழி போக்குவரத்து துறையில் குறைவாக இருக்கிறது.
இந்த நிலையில், ஹைட்ரஜனில் இயங்கும் புதிய விமான கான்செப்ட் ஒன்றை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டிசைனரான ஆஸ்கர் வினால்ஸ் வெளியிட்டிருக்கிறார். இந்த விமானத்தை பற்றிய தகவல்களும், விஷயங்களும் அசத்துகின்றன. அவற்றை ஸ்லைடரில் படங்களுடன் வழங்குகிறோம்.

டிசைனர்
டிசைனர் ஆஸ்கர் வினால்ஸ் புதிய வகைகளில் விமான கான்செப்ட்டுகளை உருவாக்கி வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த ஆண்டு இவர் வெளியிட்ட ஸ்கைவேல் என்ற விமான கான்செப்ட் பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, அதைவிஞ்சும் அம்சங்களுடன் பிராகரஸ் ஈகிள் என்ற புதிய விமான கான்செப்ட்டை வெளியிட்டிருக்கிறார்.

ஸீரோ எமிசன் விமானம்
பிராகரஸ் ஈகிள் விமானத்தின் மிக முக்கிய அம்சம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத அம்சங்கள் கொண்டது. இந்த ஸீரோ எமிசன் விமானம் ட்ரிப்பிள் டெக்கர் எனப்படும் மூன்றடுக்குகள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
இந்த விமானத்தில் ஹைட்ரஜனிலிருந்து பெறப்படும் மின்சாரத்தில் இயங்கும் 6 மின்மோட்டார்கள் இருக்கும். பின்புறத்தில் ஒரு சக்திவாய்ந்த மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். இது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் விண்ட் டர்பைனாகவும் செயல்படும்.

மின் உற்பத்தி
விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே சொந்தமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், இறக்கைகள் மற்றும் விமானத்தின் மேற்புறத்தில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர, விண்ட் டர்பைன் மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன்மூலம், நீண்ட தூர பயணங்களை எளிதாக சமாளிக்கும்.

சுகமான பயணம்
இந்த விமானம் புகையை வெளியிடாது ஒரு சிறப்பம்சம் என்பதோடு, மற்றொரு பக்கத்தில் சப்தமே இல்லாத ஒரு சுகமான பயண அனுபவத்தை வழங்கும் என்று ஆஸ்கர் வினால்ஸ் தெரிவித்துள்ளார். அதாவது, தற்போதைய விமானங்களை ஒப்பிடும்போது, 75 சதவீதம் குறைவான சப்தத்துடன் பயணிக்கும். மேலும், ஓட்டல்கள், சொகுசு தங்கும் அறைகள் இருப்பதால், ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பது போன்ற சொகுசான அனுபவத்தை பயணிகள் பெற முடியும் என்கிறார்.

பயணிகள் எண்ணிக்கை
இந்த மூன்றடுக்கு விமானத்தில் ஒரே நேரத்தில் 800 பயணிகளை ஏற்றிக்கொண்டு பறக்கும். தற்போது இருக்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தை விட கூடுதலாக 275 பயணிகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்குமாம்.

கூடுதல் பாதுகாப்பு
இந்த விமானம் ஏராளமான பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது. அதில், முக்கியமானதாக கூடுதல் லேண்டிங் கியர் எனப்படும் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புறத்தில் இரண்டும், பின்புறத்தில் ஒன்றும் கூடுதலாக இருப்பதால், பாதுகாப்புடன் தரையிறக்கவும், மேலே எழும்பவும் முடியும்.

மடக்கும் இறக்கைகள்
இந்த விமானத்தின் இறக்கைகளின் அகலம் 314 அடி. எனவே, விமான நிலையங்களில் இந்த விமானத்தின் திருப்புவதற்கும், நிறுத்துவதற்கும் வசதியாக இறக்கைகளை மடக்கிக் கொள்ள முடியும் என்பது மற்றொரு சிறப்பு.

முக்கிய அம்சங்கள்
விமானிகளுக்கான அறையுடன் சேர்த்து ஓய்வு அறை மற்றும் விமான அலுவல் அறையும் உள்ளது. இரண்டாவது தளத்தில் விமானிகள் அறை உள்ளது. பேட்டரி விமானத்தின் சரக்கு ஏற்றும் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். மூன்றாவது தளத்திலிருந்து வான் பகுதியை தெளிவாக பார்த்து ரசிக்கும் விதத்தில் இருக்கும் என்று ஆஸ்கர் குறிப்பிடுகிறார்.

சாத்தியமாகுமா?
தற்போது இந்த விமானத்தை உருவாக்குவதற்கான 40 சதவீத தொழில்நுட்பங்கள் சாத்தியமாக உள்ளதாக தெரிவித்தார். அதேநேரத்தில், இந்த விமானத்தை கட்டுவதற்கு தேவையான குவான்ட்டம் சோலார் தகடுகள், நானோ நுட்பத்திலான மின்சார ஒயர்கள், மைக்ரோ ரேடியோ வேவ் உற்பத்தி கருவிகள் போன்றவை இன்னும் சில ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டு கிடைக்கும். அப்போது, இந்த விமானத்தை கட்டுவது சாத்தியமே என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

2030ல் சாத்தியம்தான்...
2030ம் ஆண்டில் இந்த விமானத்தை கட்டமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அப்போது இந்த விமான கான்செப்ட்டிற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டுமான உபகரணங்கள் எளிதாக கிடைக்கும் என்றும் ஆஸ்கர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.


Click it and Unblock the Notifications








