டெலிவரி சேவையில் ட்ரோன்களை பயன்படுத்த ஸைப் எலெக்ட்ரிக் திட்டம்... நான்கு இந்திய நகரங்கள் தேர்வு!
ஸைப் எலெக்ட்ரிக் (Zypp Electric) நிறுவனம் தனது டெலிவரி சேவையில் மின்சாரத்தால் இயங்கும் ட்ரோன்களை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கின்றது. இதற்காக தற்போது ஓர் நிறுவனத்துடன் ஸைப் எலெக்ட்ரிக் நிறுவனம் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. இது குறித்த கூடுதல் விபரங்களை கீழே உள்ள பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஸைப் எலெக்ட்ரிக் (Zypp Electric) நிறுவனம், டிஎஸ்ஏடபிள்யூ ட்ரோன்ஸ் (TSAW Drones) நிறுவனத்துடன் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது கடைசி மைல் டெலிவரி சேவையில் ட்ரோன்களை பயன்படுத்தும் பொருட்டு ஸைப் நிறுவனம் இந்த கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது.

ஸைப் நிறுவனம் இந்தியாவில் டெலிவரி மற்றும் மின் வாகனங்களை வாடகைக்கு விடும் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. இதில், டெலிவரி பணிகளில் ட்ரோன்களை (பறக்கும் வாகனம்) ஈடுபடுத்தும் நோக்கிலேயே தற்போதைய கூட்டணி அமைந்துள்ளது.

டிஎஸ்ஏடபிள்யூ ஓர் ட்ரோன்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் 200க்கும் அதிகமான ட்ரோன்களை வாங்க ஸைப் திட்டமிட்டிருக்கின்றது. இவை நாட்டின் முக்கியமான நான்கு நகர்புற பகுதிளில் டெலிவரி சேவையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன.

முதல் கட்டமாக தொடங்கப்பட்டிருக்கும் இந்த சேவை மிக விரைவில் நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கின்றது. டெல்லி என்சிஆர், ஹைதராபாத், மும்பை மற்றும் புனே ஆகிய நான்கு நகரங்களே தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் முதலாவதாக ட்ரோன்கள் டெலிவரி சேவைக்கு உட்படுத்தப்பட இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து எந்த நகரத்தில் நிறுவனம் ட்ரோன்களை பயன்படுத்தி டெலிவரி சேவையை மேற்கொள்ளும் என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ட்ரோன்களின் வாயிலாக டெலிவரி எப்படி மேற்கொள்ளப்படும்?, இதில் தவறு ஏதும் ஏற்படாதா என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பியிருக்கலாம். இதற்கான பதில் இதோ;

ஸைப் நிறுவனம் ட்ரோன்களில் சிறிய லாக்கரை பயன்படுத்த இருக்கின்றது. இந்த லாக்கரை ஓடிபி வாயிலாக மட்டுமே திறக்க முடியும். ஓடிபி இல்லை என்றால் அதை திறப்பது மிகவும் கடினமானது. எனவே ஆர்டர் செய்யப்படும் பொருள் வேறு ஒருவரின் கைகளுக்கு செல்வது இயலாத ஒன்று என்று கூறப்படுகின்றது.

இப்போதைய கால சூழ்நிலையில் ஓர் பொருளை ஆர்டர் செய்தோமேயானால் குறைந்தது 1 மணி நேரம் முதல் ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலை நிலவுகின்றது. உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் மட்டுமே மிகவும் குறைவான நேரத்தில் டெலிவரி கொடுக்கப்படுகின்றன. ட்ரோன் டெலிவரி சேவை பயன்பாட்டிற்கு வருமானால் அனைத்து பொருட்களும் மிக குறுகிய நேரத்தில் டெலிவரி கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

ட்ரோன் டெலிவரி சேவை மற்றும் ட்ரோன் உற்பத்தி நிறுவனமான டிஎஸ்ஏடபிள்யூ ட்ரோன்ஸ் நிறுவனத்துடனான கூட்டணி குறித்து ஜிப் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகாஷ் குப்தா கூறியதாவது, "இந்தியாவின் முன்னணி ட்ரோன் உற்பத்தி நிறுவனத்துடன் கூட்டணி மேற்கொண்டதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். இ-ஸ்கூட்டர்களுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவது இதன் சிறப்பம்சம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மருத்துவம், உணவு, மளிகைப் பொருட்களை 10இல் 1 மடங்கு நேரத்தை பயன்படுத்தி டெலிவரி செய்ய முடியும். அனைத்து பகுதிகளிலும் டெலிவரிகளை மென்மையானதாகவும், ஸ்மார்ட்டானதாகவும் மாற்ற ஜைப் எலெக்ட்ரிக் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஜிப் எலக்ட்ரிக் மற்றும் டிஎஸ்ஏடபிள்யூ ட்ரோன்ஸ்-இன் கூட்டணி கடைசி மைல் டெலிவரிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும்" என கூறினார்.

டிஎஸ்ஏடபிள்யூ ட்ரோன்ஸ் தற்போது அது கையாளும் பேக்கேஜ் அளவை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. தற்போது நிறுவனம் 5கிலோ எடையுள்ள பொருட்களை கையாளும் வகையில் உள்ளன. இதனை பல மடங்கு உயர்த்தி மிலிட்டரி, துறைமுகத்தில் கார்கோக்களை கையாளுதல் போன்ற அதிக திறன் கொண்ட வாகனமாக மாற்ற அது திட்டமிட்டிருக்கின்றது. தொடர்ந்து, எதிர்காலத்தில் ஏர்-டாக்ஸியை உருவாக்கும் முயற்சியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








