தமிழகத்தில் தொழி்ற்சாலை-ஹீரோ ஹோண்டா திட்டம்
சென்னை: இந்தியாவில் முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ ஹோண்டா, தனது நான்காவது தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தான் இரு சக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில் ஹீரோ ஹோண்டாவும் தமிழகத்தில் கால் பதிக்கவுள்ளது.
இந்த நிறுவனம் விரிவாக்க நடவடிக்கையாக தனது நான்காவது தொழிற்சாலையை குஜராத் அல்லது கர்நாடகத்தில் அமைக்க திட்டமிட்டது.
ஆனால், இப்போது இந்த மாநிலங்களுக்குப் பதிலாக தமிழகத்தில் தனது ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சு நடத்தவும் ஆரம்பித்துவிட்டது.
100 முதல் 200 ஏக்கர் பரப்பில் ரூ. 1,500 கோடி முதலீட்டில் இந்த ஆலை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது ஆலையை சென்னை அருகிலேயே அமைக்க ஹீரோ ஹோண்டா விரும்புகிறது. ஆனால், தொழிற்சாலையை தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலோ அல்லது கும்மிடிப்பூண்டியிலோ அமைக்குமாறு அந்த நிறுவனத்திடம் தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது.
தென் மாவட்டத்தில் ஆலையை அமைத்தால் வேண்டிய அளவுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கவும் தமிழக அரசு முன் வந்துள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிப்காட் வளாகங்கள் ஹோண்டா அதிகாரிகளுக்குக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடத்தில் ஆலை அமைப்பது என்பதை ஹீரோ ஹோண்டா நிறுவனம்தான் முடிவு செய்யும்.
ஹீரோ ஹோண்டாவுக்கு இப்போது ஹரியாணாவில் இரு தொழிற்சாலைகளும், ஹரித்வாரில் ஒரு தொழிற்சாலையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தான் நான்காவது தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








