சென்னையில் ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு
சென்னை: சென்னையில் ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்
கடந்த வாரம் முதல் சென்னையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டது. ஹெல்மெட் அணிந்து வராதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை எச்சரித்தது.
கடந்த மாதம் 28ந் தேதி முதல் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டாலும், முதல் மூன்று நாட்களுக்கு ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பினர். இந்த நிலையில், ஹெல்மெட் அணிந்து வருவதில் போலீசார் கெடுபிடி காட்ட துவங்கியுள்ளனர்.
இதனால், கடந்த ஒரு வாரத்தில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. மேலும், முக்கிய சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை பார்ப்பதும் அரிதாகி வருகிறது.
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் மற்றும் மொபைல்போன் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்து கூடுதல் கமிசனர் சஞ்சய் அரோரா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








