8 மில்லியன் மோட்டார்சைக்கிள்களை விற்று ஹோண்டா சாதனை

ஹீரோ ஹோண்டா கூட்டுகுழுமத்தில் அங்கம் வகித்து வந்த ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் தனித்தும் மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், ஹீரோஹோண்டாவிலிருந்து வெளியேறிவிட்ட அந்த நிறுவனம், தற்போது தனது விற்பனையை அதிகரிக்கவும், உற்பத்தியை பெருக்கவும் பெரிய அளவிலான விரிவாக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தற்போது, ஹரியானா மாநிலம், மானேசர் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் தபுகெராவில் தொழிற்சாலை அமைத்து இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
இதில், சமீபத்தில் உற்பத்தியை துவங்கிய தபுகரா ஆலையின் உற்பத்தி வரும் மார்ச் மாதம் முதல் ஆண்டுக்கு 12 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் என்ற அளவில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
தவிர, பெங்களூர் அருகே தனது புதிய மூன்றாவது மோட்டார்சைக்கிள் தொழிற்சாலையை அமைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த ஆலையும் ஆண்டுக்கு 12 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறன்கொண்டதாக இருக்கும்.
இந்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளில் ஹோண்டாவின் மொத்த இருசக்கர வாகனங்களின் விற்பனை 8 மில்லியன் (80 லட்சம்) என்ற புதிய இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளது.
மேலும், அடுத்த மில்லியன் சாதனைகளை விரைவாக எட்டுவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 2011-12ம் ஆண்டில் 21லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், வரும் 2013ம் ஆண்டு பெங்களூர் தொழிற்சாலையும் உற்பத்தியை துவங்கும்போது, ஆண்டுக்கு 40 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறனை ஹோண்டா பெறும்.


Click it and Unblock the Notifications








