கோவையிலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்

கடந்த ஜனவரி மாதம் கோவையில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என்ற விதி அமல்படுத்தப்பட்டது. ஆனால், அங்கு இந்த விதி தீவிரமாக கடைபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில், கோவையில் கடந்த 5 மாதங்களில் 83 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த கோவை மாநகர போலீசார் முடிவு செய்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வருவது தீவிரமாக்கப்படுவதாகவும் புதிய விதி 09.06.2011 முதல் அமலுக்கு வருவதாகவும் போலீசார் அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து, கோவை மாநகரில் நேற்றுமுதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷ்னர் அம்ரேஷ் பூஜாரி கூறியதாவது:
கோவை மாநகரில் இன்றுமுதல் (நேற்று) இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வருவதை கட்டாயமாக்கியுள்ளோம். இதேபோன்று, டிரைவிங்கின்போது மொபைல்போன் பேசுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும், காரில் வருபவர்கள் சீ்ட் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.100 அபராதமும், சீட் பெல்ட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.50 அபராதமாக விதிக்கப்படும்," என்றார்
ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கோவை மாநகரில் உள்ள ஹெல்மெட் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதையே வாய்ப்பாக பயன்படுத்தி சில கடைகளில் கூடுதல் விலை வைத்து ஹெல்மெட் விற்கப்படுவதாக இருசக்கர வாகன ஓட்டிகள் புகார் கூறினர்.


Click it and Unblock the Notifications








