அடுத்த ஆண்டு மத்தியில் வருகிறது பவர்ஃபுல் கேடிஎம் டியூக்

என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் ஸ்திரமான மார்க்கெட்டை வைத்திருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிரிமியம் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டிலும் முக்கிய இடம் பிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் தனது துணை பிராண்டான கேடிஎம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் பல புதிய திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.
இதன் துவக்கமாக இந்த ஆண்டு துவக்கத்தில் கேடிஎம் பிராண்டில் டியூக் 200 பைக்கையும், சமீபத்தில் பல்சர் 200என்எஸ் பைக்கையும் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. இதில், கேடிஎம் டியூக் 200 பைக் நம் நாட்டு இளைஞர்களை வெகு சீக்கிரத்தில் கவர்ந்து மனதில் சிம்மாசனம் போட்டுவிட்டது. விற்பனையில் யாருமே எதிர்பாராத வகையில் வெற்றிநடைபோட்டு வருகிறது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு 375சிசி திறன் கொண்ட பல்சர் பைக்கை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இதனிடையே, பல்சர் 375 பைக்குக்கு முன்னதாக கேடிஎம் பிராண்டில் டியூக் 390 என்ற பெயரில் 375சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் புதிய பைக்கை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ-கேடிஎம் கூட்டணி திட்டமிட்டிருக்கிறது.
வரும் 15ந் தேதி இத்தாலியிலுள்ள மிலன் நகரில் துவங்கும் ஆட்டோ ஷோவில் இந்த புதிய பைக் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பைக் 45 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும்.
மேலும், தற்போதைய 200சிசி டியூக் பைக்கைவிட தோற்றத்திலும் இன்னும் மிரட்டலாக இருக்கும். அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய கேடிஎம் டியூக் பைக் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய பைக் ரூ. 2 லட்சம் விலையில் வரலாம் என யூகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








