குஜராத்தில் புதிய ஆலை: ரூ.1,200 கோடி முதலீடு செய்யும் ஹீரோ

இரு சக்கர வாகன உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் மார்க்கெட்டில் தற்போது தனிக்காட்டு ராஜாவாக திகழ்கிறது. இந்த நிலையில், ஹீரோவிடமிருந்து விலகிச் சென்ற ஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது.
அடுத்த 3 ஆண்டுகளில் ஹோண்டாவின் விற்பனை பன்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அந்த நிறுவனம் தேவையை சரிகட்டும் விதமாக புதிய இருசக்கர வாகன ஆலைகளை திறந்து வருவதுடன், கர்நாடகாவில் புதிய ஆலையையும் கட்டி வருகிறது.
இது ஹீரோவை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. புதிய பார்ட்னரை தேடுவது ஒரு பக்கம் இருந்தாலும் உள்நாட்டு தேவையை சரிகட்டுவதற்கான நடவடிக்கைகளிலும் அந்த நிறுவனம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைக்கருத்தில்கொண்டு, தனது உற்பத்தியை கணிசமாக அதிகரித்துக்கொள்ள ஹீரோ முடிவு செய்துள்ளது.
இதற்காக, குஜராத்தில் புதிய இருசக்கர வாகன ஆலையை கட்டுவதற்கு ஹீரோ திட்டமிட்டுள்ளது. இதற்காக, ரூ.1,200 கோடியை அங்கு முதலீடு செய்கிறது ஹீரோ. தவிர, கர்நாடக மாநிலம், தார்வாட் என்ற இடத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் வாகன ஆலைக்கு அருகில் புதிய ஆலை கட்டிக்கொள்வதற்கு 500 ஏக்கர் நிலத்தை அம்மாநில அரசு காண்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








