புத்தம் புதிய 250 சிசி பைக்கை களமிறக்கும் ஹீரோ!

ஹோண்டா பிரிந்ததையடுத்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சொந்த தொழில்நுட்பத்தில் பல புதிய பைக் மாடல்களை அறிமுகப்படுத்துவதில் அதிதீவிரமாக இறங்கியுள்ளது. தொழில்நுட்ப உதவிக்காக 3 அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஹீரோ ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது.
அதில், ஒரு நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த எரிக் புயெல் நிறுவனத்துடன் இணைந்து புத்தம் புதிய 250சிசி திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்கை ஹீரோவும், எரிக் புயெல் ரேஸிங் நிறுவனமும் இணைந்து வடிவமைத்து வருகின்றன. 2014ம் ஆண்டு துவக்கத்தில் டெல்லியில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய பைக்கை அறிமுகப்படுத்த ஹீரோ திட்டமிட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சேர்ந்த இளம் எஞ்சினியர்கள் குழு ஒன்று அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியிலுள்ள எரிக் புயெல் ஆராய்ச்சி மையத்தில் தங்கி புதிய பைக்கை வடிவமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்த தலைமுறை அம்சங்களுடன் இந்த புதிய பைக்கை வடிவமைக்கப்பட்டு வருவதாக புதிய பைக் வடிவமைக்கும் திட்டத்தில் பங்கு வகிக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், இந்த புதிய பைக் வடிவமைக்கும் திட்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சிஇஓ பவன் முஞ்சால் நேரடியாக கண்காணித்து வருகிறார். ஹோண்டா சிபிஆர் 250ஆர், பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்து வரும் கவாஸாகி நிஞ்சா 250ஆர் உள்ளிட்ட பைக்ககுகளுக்கு இந்த புதிய பைக் நேரடி போட்டியை கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








