மேட் இன் இந்தியா... ஹோண்டாவின் புதிய தாரக மந்திரம்
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டிசைன் செய்யப்பட்ட புத்தம் புதிய இருசக்கர வாகனத்தை ஹோண்டா அறிமுகப்படுத்த உள்ளது. அடுத்த ஓர் ஆண்டில் இந்த புதிய டூ வீலர் மார்க்கெட்டுக்கு வருகிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 100 எஞ்சினியர்களும், ஹோண்டாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சேர்ந்த 100 எஞ்சினியர்களும் இணைந்து இந்த புதிய இருசக்கர வாகனத்தை வடிவமைத்து வருகின்றனர்.

இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் கெய்டா முரமட்சு கூறுகையில்,"100 சதவீதம் இந்தியாவிலேயே வடிவமைக்கப்படும் வாகனத்தை உருவாக்கி வருகிறோம். மானேசரில் உள்ள எங்களது ஆராய்ச்சி மையத்தில் இந்த புதிய வாகனத்தை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
புதிய மாடலை உருவாக்குவதற்காக 200 எஞ்சினியர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். அடுத்த ஓர் ஆண்டிற்குள் இந்த புதிய மாடல் மார்க்கெட்டுக்கு வந்துவிடும்," என்றார்.
பொதுவாக, உலக அளவில் ஹோண்டாவின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வடிவமைக்கும் ஆராய்ச்சி மையம் தனி அமைப்பாக செயல்பட்டு வருகிறது. உற்பத்தி மற்றும் விற்பனைப் பிரிவுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. ஆனால், முதன்முறையாக, மானேசர் ஆராய்ச்சிப் பிரிவில் ஒரே குடையின் கீழ் புதிய மாடலை உருவாக்குவதற்காக அனைத்து பிரிவு பொறியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அங்கு வடிவமைக்கப்படுவது ஸ்கூட்டரா அல்லது மோட்டார்சைக்கிளா என்பது குறித்து கெய்டா முரமட்சூ தகவல் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் நம்பர்-1 இருசக்கர வாகன தயாரிப்பாளர் என்ற இடத்தை பிடிப்பதற்காக, எவ்வளவு முதலீடு வேண்டுமானாலும் செய்வதற்கு ஹோண்டா தயாராக இருப்பதுடன் அதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications