செஞ்சூரோ பாணியில் வரும் புதிய மஹிந்திரா ஸ்கூட்டர்!
செஞ்சூரோ போன்று புதுமையான வசதிகளுடன் கூடிய புதிய ஸ்கூட்டர் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
பெங்களூரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஹிந்திராவின் இருசக்கர வாகனப் பிரிவு தலைவர் அனூப் மாத்தூர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது," நான்கு சக்கர வாகன மார்க்கெட்டில் பொலிரோ, ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி 500 மாடல்களின் மூலம் மஹிந்திரா பிராண்டுக்கு நன்மதிப்பும், தனித்துவமும் பெற்றிருக்கிறோம்.
இதேபோன்று இருசக்கர வாகன மார்க்கெட்டிலும் மஹிந்திராவுக்கு தனித்தன்மையை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக, பல புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். முதலாவதாக, இந்த ஆண்டு இறுதியில் புதிய ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறோம். இதைத்தொடர்ந்து, புதிய மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்வோம்," என்று தெரிவித்தார்.

புதிய ஸ்கூட்டர்
டியூரோவின் டிசைன் தாத்பரியங்களுடன் வரும் புதிய ஸ்கூட்டர் செஞ்சூரோவில் உள்ளது போன்று புதுமையான பல வசதிகளுடன் வர இருக்கிறது. இது பிரிமியம் ஸ்கூட்டர் மாடலாக மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

புதிய மாடல்கள்
அடுத்த இரண்டரை ஆண்டுகளில் 10 புதிய மாடல்களை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வருகிறது. 3 மாதங்களுக்கு ஒரு புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், 100சிசி முதல் 300சிசி வரையிலான மோட்டார்சைக்கிள்களும், 100சிசி முதல் 125சிசி வரையிலான ஸ்கூட்டர் மாடல்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோஜோ அறிமுகம்
வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மோஜோ மோட்டார்சைக்கிளை மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கிறது.

'வாவ்' பைக்
மோஜோ குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அனூப் மாத்தூர்," மோஜோ வாடிக்கையாளர்களை 'வாவ்' என்று சொல்ல வைக்கும்," என்றார்.

டிசைன் மாற்றம்
கான்செப்ட் பைக்கைவிட தயாரிப்பு நிலை மோஜோ பைக்கின் டிசைனில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் இதுவரை படங்களில் பார்த்த மோஜோவுக்கும், இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் என்றும் அனூப் மாத்தூர் குறிப்பிட்டார்.

வசதிகள்
செஞ்சூரோவின் வெற்றிக்கு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் புதுமையான வசதிகளே காரணம். இதுபோன்று, இனி வரும் பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் கூடுதல் வசதிகள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும் என்றும் அனூப் தெரிவித்தார்.

விலை
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே பாகங்களை பெற்று தயாரிக்கப்படுவதால், மோஜோ பைக்கை மிக சவாலான விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக மாத்தூர் கூறினார்.

கூட்டணி
ஹீரோ, பஜாஜ் போன்று வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் எதுவும் இருக்கிறதா என்று கேட்டதற்கு, அப்படி வரும்போது நிச்சயம் அது குறித்து வெளிப்படையாக தெரிவிப்போம் என்று அனூப் மாத்தூர் கூறினார்.


Click it and Unblock the Notifications








