இந்தியாவின் டாப் -5 'பெஞ்ச்மார்க்' பெர்ஃபார்மென்ஸ் பைக் மாடல்கள்!
உலகின் மிகப்பெரிய பைக் மார்க்கெட்டுகளில் ஒன்றான இந்தியாவில் தற்போது பெர்ஃபார்மென்ஸ் பைக் மாடல்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த மார்க்கெட்டை குறிவைத்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் படையெடுத்து வருகின்றன.
இந்தியாவின் பெர்ஃபார்மென்ஸ் பைக் மார்க்கெட்டில் அதிக கவனம் செலுத்தாத பல நிறுவனங்கள் இந்த மார்க்கெட்டில் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றன. அதேநேரத்தில், ஓட்டுபவருக்கு த்ரில்லான ரைடிங் அனுபவத்தை தரும் பைக் மாடல்கள் இந்திய மார்க்கெட்டில் இல்லாமல் இல்லை.
1980களிலிருந்து 2000ம் வருடத்திற்கு முன்பு வரை பல நல்ல பெர்ஃபார்மென்ஸ் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன. இப்போது வரும் பைக்குகளில் இருக்கும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமல், குறைந்த சிசி கொண்ட எஞ்சின் கொண்ட அந்த பைக்குகள் ஓட்டுபவரை மெய்சிலிர்க்க வைத்துள்ளன.
அதுபோன்று, இந்திய பெர்ஃபார்மென்ஸ் பைக் மார்க்கெட்டில் முன்மாதிரியாக விளங்கிய 5 சிறந்த பைக் மாடல்களை உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம். இந்த பைக்குகள் உங்கள் கடந்த காலங்களை நினைவுகூறச் செய்வதுடன், இப்போது வரை மறக்க முடியாத அனுபவத்தை தந்த மாடல்களாக அவை இருக்கின்றன.
சில வீடுகளில் இந்த பைக்கை வாங்க பெற்றோரிடம் மன்றாடிய அனுபவமும் இருந்திருக்கும். அதுபோன்று, இளைஞர்களை கவர்ந்திழுத்த பைக் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

பெஞ்ச்மார்க் பைக் மாடல்கள்
இந்தியாவின் 5 பெஞ்ச்மார்க் பெர்ஃபார்மென்ஸ் பைக் மாடல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

5. ஹீரோ ஹோண்டா சிபிஇசட்
150சிசி செக்மென்ட்டை சிபிஇசட் மாடலுடன் துவங்கி வைத்த பெருமையை ஹீரோ- ஹோண்டா கூட்டணிக்கு உண்டு. 1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிபிஇசட் பைக் மாடலில் ஹோண்டா நிறுவனத்தின் 156.8சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு வந்தது. மேலும், ஹைட்ராலிக் பிரேக்குடன் நவீன தொழில்நுட்ப யுகத்துக்கும் அடிகோலியது. கெய்ஹின் ஸ்லைடு டைப் கார்புரேட்டர் பொருத்தப்பட்டு வந்த இந்த பைக் மாடல் சிறந்த பெர்ஃபார்மென்ஸை வழங்கியதால், இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்த பைக் மாடலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. தற்போது கால மாற்றத்துக்கு ஏற்றவாறு மாறுதல்களுடன் எக்ஸ்ட்ரீம் என்ற பெயர் மாற்றத்துடன் விற்பனையில் இருந்து வருகிறது.

4.யமஹா ஆர்எக்ஸ்100
இன்றைக்கும் இந்த பெயரை கேட்டாலே மனதிற்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தும். 1985ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் தடம் பதித்த யமஹா ஆர்எக்ஸ் 100 பைக் மாடல் யமஹா நிறுவனத்துக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பெர்ஃபார்மென்ஸ் என்றால் அப்படியொரு பெர்ஃபார்மென்ஸ் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை வழங்க வல்லது.98சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த பைக் 2 ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்டது. அதிகபட்சமாக 11 பிஎச்பி பவரை அளிக்கும் இந்த பைக் 100கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

உற்பத்தி நிறுத்தம்
1996வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு பிரச்னை காரணமாக 4 ஸ்ட்ரோக் பைக் மாடல்கள் தலைதூக்க ஆரம்பித்ததும் இந்த பைக் மாடல் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் சப்தமும், செயல்திறனும் ஓட்டும்போது ஒரு அலாதி சுகத்தை, கெத்தையும் தந்ததை மறக்க முடியவில்லை. இன்றைக்கும் இந்த பைக்கை பலர் பராமரித்து நல்ல நிலையில் வைத்துள்ளனர். மேலும், பைக் பிரியர்கள் மத்தியில் இந்த பைக்கிற்கு நல்ல மவுசு இருக்கிறது.

ஆர்எக்ஸ் 100 வழித்தோன்றல்கள்
யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கின் வழித்தோன்றல்களாக ஆர்எக்ஸ் 135, ஆர்எக்ஸ்-ஜி, ஆர்எக்ஸ்இசட் மற்றும் டைகர் உள்ளிட்ட பைக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

3. சுஸுகி ஷோகன்
1996ம் ஆண்டு அறிமுகம் செய்யப்ப்டட இந்த பைக் மாடலுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 14 பிஎச்பி பவரை அளிக்கும் 110சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட சுஸுகி ஷோகன் ரேஸ் பிரியர்களிடையே பிரபலம். மல்டி போர்ட் 2 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த இந்த பைக் பல பிரத்யேக அம்சங்களை கொண்டது. இதன் சைலென்சர் சப்தமும் பைக் பிரியர்களை பல காலம் கட்டிப்போட்டு வைத்திருந்தது.

ஷோகன் கையாளுமை
ஆரம்ப நிலையிலிருந்து அதிவேகம் வரை மிக சீரான பவர் வெளிப்படுத்தும் என்பதுடன், யமஹா ஆர்எக்ஸ் 100 மாடலைப் போன்றே இந்த பைக்கும் உடனடி பிக்கப்பை வழங்கும்.

2. ராயல் என்ஃபீல்டு ஸ்டான்டர்டு 350
1893ம் ஆண்டு துவங்கப்பட்ட உலகின் மிக பழமையான ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வர்த்தகத்தில் மிக நிலையாக இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஸ்டான்டர்டு 350 மாடல் பெஞ்ச்மார்க் மாடலாக பெரும் புகழை பெற்றது. நீண்ட தூர பயணங்களுக்கு இது மிகச்சிறந்த மாடலாக இருந்து வருகிறது. முந்தைய தலைமுறை வரை ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் வலதுபுறம் கியர் ஷிஃப்ட்டும், இடதுபுறம் பிரேக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த மோட்டார்சைக்கிளை வைத்திருந்தவர்களுக்கு இது ஒரு பெருமைக்குரிய விஷயமாக இருந்து வந்தது.

பவரும், எடையும்...
அதிக எடை கொண்ட இந்த மோட்டார்சைக்கிளை ஓட்டும்போது, எடையை ஒரு பொருட்டாக இதன் எஞ்சின் ஓட்டுபவருக்கு காட்டுவதில்லை. பார்க்க முரட்டுத் தோற்றமாக இருந்தாலும், ஓட்டும்போது பவர் டெலிவிரியும், வித்தியாசமான ரைடிங் அனுபவத்தையும் தரவல்லது. 1994ம் ஆண்டு ஸ்டான்டர்டு மாடலில் 500சிசி எஞ்சின் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. நெடுஞ்சாலையில் செல்லும்போது கிடைக்கும் ஓட்டுதல் சுகத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இன்றைக்கும் தனக்கென தனி ரசிக பட்டாளத்துடன் வெற்றி நடைப்போட்டு வருகிறது.

1. யமஹா ஆர்டி350
ரேஸ் பிரியர்களின் கைகளுக்கு சவால் விட்ட மாடல் இது. இந்தியாவின் ஓர் உண்மையான ஸ்போர்ட்ஸ் பைக் மாடலான இதனை எஸ்கார்ட்ஸ் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்தது. இந்த பைக்கில் 30.5 பிஎச்பி பவரை அளிக்கும் 347சிசி பேரலல் ட்வின் 2 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. ரீட் வால்வுகள் மூலமாக எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தும் அமைப்பு கொண்டது இதன் பிரத்யேக அம்சம். 1983 முதல் 1990 வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது.

செயல்திறன்
இந்த பைக்கின் ட்வின் சிலிண்டர் எஞ்சினும், 6 ஸ்பீடு கியர்பாக்ஸும் மிகச்சிறப்பான செயல்திறனை வழங்கியது. இதன் ஃப்ரேம் யமஹாவின் டிஇசட்250 மற்றும் டிஇசட்350 ரேஸ் பைக் மாடல்களை ஒத்திருந்தது. மிகச்சிறப்பான கையாளுமையை வழங்கும்.

டாப் ஸ்பீடு
மைலேஜ் மிக குறைவாக இருந்ததால், இதன் எஞ்சினில் மாற்றங்கள் செய்யப்பட்டது. லோ டார்க் வெர்ஷனாக வந்த இந்த புதிய எஞ்சின் 27 பிஎச்பி பவரை வழங்கும் மேலும், மணிக்கு 150கிமீ.,க்கும் அதிகமான வேகத்தில் செல்லும் வல்லமை கொண்டதாக இருந்தது. இப்போது உள்ள பெர்ஃபார்மென்ஸ் பைக் மாடல்களுடன் ஒப்பிடும்போது, இதனை மிகச்சிறப்பான மாடலாக இதனை கூறலாம். ரூ.20,000 விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த பைக் மாடல் பைக் பிரியர்களின் மனதை விட்டு அகலாத மாடல் என்பதை மறுக்க இயலாது.

மலரும் நினைவுகள்
இங்கே இடம்பெற்றிருக்கும் மாடல்களுடன் உங்களுக்கு இருந்த நெருக்கத்தை பற்றிய மலரும் நினைவுகளை கமென்ட் பாக்ஸில் பகிர்ந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








