ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் வலம் வரப் போகும் குஜராத் போலீஸ்!
புத்தாண்டு முதல் ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் வலம் வர இருக்கின்றனர் குஜராத் போலீசார்.
அடுத்த மாதம் குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் குஜராத் முதலீட்டு ஈர்ப்பு மாநாடு ஒன்றை அம்மாநில அரசு நடத்த இருக்கிறது. இதற்காக, பல்வேறு மேம்பாட்டு பணிகளை அம்மாநில அரசு செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, புதிய மஹிந்திரா பொலிரோ ஜீப்புகளை போலீசாருக்கு வழங்கியுள்ளது குஜராத் அரசு.

அடுத்ததாக, போலீசாருக்கு ஹார்லி டேவிட்சன் உள்பட 20 விலையுயர்ந்த பைக்குகளையும் கொடுக்கிறது. ஹார்லி டேவிட்சன் சூப்பர் லோ, ஸ்ட்ரீட் 750, டிரையம்ஃப் போனிவில், ஹயோசங் அக்குலா புரோ ஆகிய மோட்டார்சைக்கிள்கள் போலீசாருக்கு வழங்கப்பட உள்ளன.
இதுபோன்று, ஏற்கனவே பல்சர் 220 பைக்குகள் போலீசாருக்கு வழங்கப்பட்டன. ஆனால், போதிய பயிற்சி இல்லாததால், அந்த பைக்குகள் விபத்துக்களில் சிக்கின.
ஆனால், இந்த முறை போலீசாருக்கு தயாரிப்பாளரிடமிருந்தே நேரடியாக பைக்குகளை ஓட்டுவது, கையாள்வது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. போலீசாருக்கு வழங்கப்படும் பைக்குகளில் சேடில் பேக்குகள், சைரன், போலீஸ் சின்னம் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கும்.
மேலும், வயர்லெஸ் வசதியும் செய்து கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஐபி.,களை அழைத்து செல்லும்போது, இவை பாதுகாப்பு வாகனங்களாக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








