ஏப்ரலில் வருகிறது மஹிந்திரா மோஜோ 300 ஸ்போர்ட்ஸ் பைக்!
வரும் ஏப்ரல் மாதம் மஹிந்திரா மோஜோ 300 ஸ்போர்ட்ஸ் பைக்கை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மஹிந்திரா இருசக்கர வாகன நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனம் மோஜோ என்ற ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக்கை தயாரித்துள்ளது. வெகுவேகமான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வரும் இந்த ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் கவாஸாகி, கேடிஎம், ஹோண்டா உள்ளிட்ட வெளிநாட்டு மாடல்களின் ஆதிக்கம் அதிகமிருக்கிறது.

வெளிநாட்டு பைக்குகளைவிட மஹிந்திரா மோஜோ குறைவான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பைக்கை விற்பனைக்கு கொண்டு வருவதை மஹிந்திரா ஒத்திபோட்டு வருகிறது.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் மஹிந்திராவின் புதிய கஸ்ட்டோ ஸ்கூட்டர் அறிமுக விழா நேற்று நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்திரா இருசக்கர வாகன நிறுவனத்தின் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு துணைத்தலைவர் தர்மேந்திர மிஸ்ரா கூறுகையில், " கஸ்ட்டோ ஸ்கூட்டருக்கு அடுத்த அறிமுகமாக மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக்கை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
அடுத்த நிதி ஆண்டின் துவக்கத்தில் மோஜோ விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஏற்கனவே அறிவித்தபடி, ஒவ்வொரு ஆறுமாதங்களுக்கும் ஒரு புதிய மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








