ஆய்வு, மேம்பாட்டு பணிகளுக்காக எம்வி அகுஸ்ட்டா பைக் இறக்குமதி!
இந்தியாவின் சூப்பர் பைக் சந்தையின் விற்பனை வளர்ச்சியை கண்டு, பல வெளிநாட்டு நிறுவனங்கள் படையெடுத்து வருகின்றன. இந்த வரிசையில், இத்தாலியை சேர்ந்த புகழ்பெற்ற சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனமான எம்வி அகுஸ்ட்டாவும் விரைவில் இந்திய சந்தையில் கால் பதிக்க உள்ளது.
நம் நாட்டின் கைனெட்டிக் நிறுவனத்தின் கூட்டணியில், எம்வி அகுஸ்ட்டா தனது உயர்வகை பைக் மாடல்களை விற்பனை செய்ய உள்ளது. சமீபத்தில் இந்த கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின் பிரபலமான எஃப்3 800 பைக் ஒன்று சமீபத்தில் இந்தியாவில் ஆய்வுப் பணிகளுக்காக இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், அடுத்த சில மாதங்களில் எம்வி அகுஸ்ட்டா பைக்குகள் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த மாடல்
இந்த புதிய பைக் மாடல் 1000சிசி பைக்குகளுக்கு இணையான செயல்திறனையும், 600சிசி ஸ்போர்ட்ஸ் பைக்குகள் போன்ற கையாளுமையையும் வழங்க வல்லது. ஏனெனில், இந்த பைக் வெறும் 173 கிலோ மட்டுமே எடை கொண்டது என்பதால், இந்த இரண்டு அம்சங்களிலும் நிறைவை தரும்.

எஞ்சின்
இந்த புதிய எம்வி அகுஸ்ட்டா எஃப்3 800 பைக்கில் 3 சிலிண்டர்கள் அமைந்த 798சிசி லிக்யூடு கூல்டு சிஸ்டம் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 148 எச்பி பவரையும், 88 என்எம் டார்க்கையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஸ்லிப்பர் க்ளட்ச் கொண்டதாக வருவதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்க்கும் விலை
விலை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த புதிய பைக் மாடல் ரூ.16 லட்சம் விலை கொண்டதாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி
டுகாட்டி, ட்ரையம்ஃப், ஹோண்டா போன்ற நிறுவனங்களின் உயர்வகை மாடல்களுக்கு எம்வி அகுஸ்ட்டா பைக்குகள் கடும் சவாலையும், போட்டியையும் தரும்.

அகுஸ்ட்டா மாடல்கள்
இந்த பைக் மட்டுமின்றி, தனது ஒட்டுமொத்த பைக் மாடல்களையும் இந்தியாவில் ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகம் செய்ய எம்வி அகுஸ்ட்டா திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








