ஏத்தர் எஸ்340... இந்தியாவின் அதிவேக எலக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர்!
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான மதிப்பு இன்னும் ஒருசில ஆண்டுகளில் குறைந்துவிடும் என்ற கணக்கோடு, பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகரித்து வரும் தேவையை கருத்தில்கொண்டு பல நிறுவனங்கள் களமிறங்கி வருகின்றன.
அதில், பெங்களூரை மையமாக கொண்டு இயங்கும் ஏதர் எனர்ஜி என்ற நிறுவனம் ஒரு அசத்தலான தயாரிப்புடன் மார்க்கெட்டில் களமிறங்க உள்ளது. ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் பயின்ற இரு பொறியாளர்கள் இணைந்து இந்த நிறுவனத்தை துவங்கியிருக்கின்றனர்.

இந்த ஸ்கூட்டரின் ஸ்பெஷாலிட்டி என்னவெனில், இந்தியாவின் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெருமையுடன் வருகை தருகிறது. அதாவது, பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு இணையான டாப் ஸ்பீடு கொண்டதாக இதனை தயாரித்துள்ளனர்.

ஏதர் எஸ்340 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஸ்கூட்டர்தான் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டர் மாடலாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் 7 இன்ச் டச்ஸ்கிரீன் கொண்ட டேஷ்போர்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. லினக்ஸ் சாஃப்ட்வேரில் இயங்கும் இந்த டேஷ்போர்டு 3ஜி சிம் கார்டு மூலமாக நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

இதனால், அவ்வப்போது இந்த ஸ்கூட்டருக்கான அப்டேட்டுகளை செய்ய முடியும். சர்வீஸ் மையத்திற்கு ஸ்கூட்டரை எடுத்து வரும் தேவையில்லை. நேவிகேஷன் வசதியுடன் வரும் இந்த ஸ்கூட்டரில் உரிமையாளர் தனக்கான சுய விபரங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

அதுமட்டுமல்ல, ஓட்டும் முறை, ஆக்சிலரேட்டர் கொடுக்கும் விதம், பிரேக் பிடிக்கும் விதம், மைலேஜ் என அனைத்து விபரங்களும் நிறுவனத்தின் தலைமை கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள சர்வர் கம்ப்யூட்டரில் பதிவாகிவிடும். இதனை வைத்து உரிமையாளருக்கு சில கூடுதல் டிப்ஸ்களை வழங்கவும் வாய்ப்புள்ளது.

இந்த ஸ்கூட்டரில் எக்கானமி மற்றும் ஸ்போர்ட்ஸ் என்ற இரு விதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சாலைநிலைகளுக்கு ஏற்ப இந்த டிரைவிங் மோடுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது பேட்டரியிலிருந்து மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும் உதவும்.

தற்போது மார்க்கெட்டில் உள்ள ஸ்கூட்டர் மாடல்கள் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ முதல் 30 கிமீ வேகத்தில் பயணிக்கும். ஆனால், ஏதர் எஸ்340 ஸ்கூட்டர் மணிக்கு 72 கிமீ வேகம் வரை பயணிக்கும். எனவே, பெட்ரோல் ஸ்கூட்டர்கள் போன்ற செயல்திறனை எதிர்பார்க்கலாம்.

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 60 கிமீ தூரம் பயணிக்கும். எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் வருவதால், இந்த ஸ்கூட்டரை வாங்கும் உரிமையாளர்களுக்கு தள்ளுபட சலுகையும் கிடைக்கும்.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் அதிபர்கள் இந்த ஸ்கூட்டர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அதேபோன்று, டைகர் குளோபல் இன்வெஸ்ட்டிங் நிறுவனத்திடமிருந்து பெருமளவு முதலீடு பெறப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








