டூ விலர்களுக்கான ஏபிஎஸ் சாதனங்களை தயாரிக்கிறது பாஷ் நிறுவனம்...
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாஷ் லிமிடெட், உலக அளவில் பரவலாக அறியப்பட்ட நிறுவனங்களில் ஒன்று. தொழில்நுட்ப சாதனங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் என பல முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகளில் பாஷ் நிறுவனத்தின் உதிரி பாகங்களே பொருத்தப்பட்டிருக்கும்.
60 நாடுகளில் மொத்தம் 250-க்கும் மேற்பட்ட உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது பாஷ் நிறுவனம். கடந்த ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் உள்ள பாஷ் நிறுவன கிளைகளில் 3,75,000 பேர் பணியாற்றி வந்தனர்.
இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருவாய் மட்டும் 70 பில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,20,000 கோடி) என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி உலகின் மூலை முடுக்கில் உள்ள ஏதோ ஒரு பொருளின் வாயிலாக நீக்கமற நிறைந்திருக்கும் பாஷ் கம்பெனியின் உற்பத்தி ஆலை புனேவில் உள்ள சகன் பகுதியிலும் உள்ளது.

அடுத்த நிதியாண்டு முதல், அதாவது 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டூ விலர்களுக்குத் தேவையான ஏபிஎஸ் (ஆண்டி பிரேக் லாக் சிஸ்டம்) சாதனங்களை புனே தொழிற்சாலையில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாம் அந்நிறுவனம்.
வேகமாக வண்டியில் செல்லும் போது திடீரென பிரேக் பிடித்தால் வீல்கள் லாக் ஆகாமல் தடுக்க உதவும் பாதுகாப்பு சாதனம் தான் ஏபிஎஸ். கார்களில் இந்த சாதனம் அதிக அளவில் பொருத்தப்படுகிறது.
மோட்டார் சைக்கிள்களைப் பொருத்தவரை, புதிதாக விற்பனை செய்யப்படும் 125 சிசி திறனுக்கு மேற்பட்ட அனைத்து டூ வீலர்களிலும் ஏபிஎஸ் சிஸ்டம் இருக்க வேண்டும் என்ற சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அது 2018-ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. அதேபோல், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்திலும் 2019-ஆம் ஆண்டுக்குள் ஏபிஎஸ் சாதனங்களைப் பொருத்த வேண்டும் என்பது கட்டாயம்.
அதைக் கருத்தில் கொண்டுதான் பாஷ் நிறுவனம் டூ விலர்களுக்கான ஏபிஎஸ் சிஸ்டத்தை புனேவில் அடுத்த ஆண்டு முதல் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை அந்நிறுவனத்தின் துணை செயல் தலைவர் (உற்பத்தி மற்றும் தர நிர்ணயப் பிரிவு) ஆண்ட்ரீயாஸ் வோல்ஃப் தெரிவித்துள்ளார்.
ஆண்டொன்றுக்கு 7 லட்சத்திலிருந்து 8 லட்சம் ஏபிஎஸ் சாதனங்களை பாஷ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தியாவில் இத்தகைய பாதுகாப்பு சாதனங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டால், அதன் விலை மார்க்கெட்டில் குறையும்... அப்படி பார்க்கையில் வாடிக்கையாளர்களுக்குப் பலனளிக்கும் எத்தகைய தொழில் உற்பத்தியும் வரவேற்கத்தக்கதே...


Click it and Unblock the Notifications








