பண்டிகைகளை அதன் ரசத்துடன் கொண்டாட புறப்படும் டிரைவ்ஸ்பார்க் டீம்!
நானும், எமது டிரைவ்ஸ்பார்க் தளத்தின் மேனேஜிங் எடிட்டர் ஜோபோவும் அவ்வப்போது காரில் ஒன்றாக அலுவலகம் செல்வது வழக்கம். அப்போது பெங்களூர் நகரின் டிராஃபிக் ஜாம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும், சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டிருக்கும் வேறுபாடுகள் குறித்தும் பேசுவது வாடிக்கையான விஷயம்.
எனக்கும் பெங்களூருவுக்குமான பந்தம் பால்ய பருவத்திலிருந்தே உண்டு. ஆனால், முழுமையாக இங்கேயே குடியேறி 8 ஆண்டுகள் தாண்டி விட்ட நிலையில், சொந்த ஊருக்கும் பெங்களூருக்குமான வித்தியாசங்கள் குறித்தும், சிறு வயதில் அமைதியாக பார்த்த பெங்களூர் இப்போது எந்தளவு பரபரப்பாக மாறிவிட்டது என்றும் நான் கூறினேன்.

மேலும், சொந்த ஊருக்கும் பெங்களூருக்குமான வித்தியாசங்கள் குறித்த பேச்சின்போது, சொந்த ஊரில் பண்டிகை கொண்டாட்டம் குறித்த பேச்சு வந்துவிட்டது. அப்போது, பெங்களூரில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து அவர் கூறினார்.
அப்போது, எனது ஊரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் குறித்து சற்று உயர்த்தி கூறினேன். இதையடுத்து, பொங்கல் பண்டிகை குறித்து ஆர்வமுடன் கேட்கத் துவங்கினார். அந்த தகவல்கள், கிறிஸ்துமஸையும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கும் மட்டுமே பழகி போயிருந்த அவருக்கு இது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பண்டிகை காலத்தில் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் குறித்து தெரியுமா? என்று ஜோபோவிடம் கேட்டேன்.அவ்வப்போது நாட்டின் இதர நகரங்களுக்கு சென்று வந்தாலும், இந்த பண்டிகை கொண்டாட்டங்கள் குறித்து ஐடியா இல்லை என்றார்.
அப்படியானால், அந்த பண்டிகைகள் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை இப்போதாவது தெரிந்து கொள்ள முடியுமா? என்றேன்.யெஸ் என்று இதனை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு நாட்டின் முக்கிய கலாச்சார பண்டிகைகளை தெரிந்து கொள்ள புறப்பட முடிவு செய்தார்.
உடனடியாக திட்டமிட முடிவு செய்தார். அதன்படி, அடுத்து இருக்கும் பண்டிகைகள் குறித்து வினவினார். அதன்படி, துர்காபூஜையை கொல்கத்தாவிலும், தீபாவளியை புனேவில் உள்ள நண்பர் வீட்டிலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொச்சியிலும், தனக்கு விருப்பமான புத்தாண்டு கொண்டாட்டத்தை பெங்களூரில் குடும்பத்தினருடன் கொண்டாட முடிவு செய்தார்.
மேலும், பன்முக கலாச்சார தன்மைக்கு மாறியிருக்கும் சென்னை நகரம் பொங்கல் பண்டிகையை இப்போது எவ்வாறு கொண்டாடுகிறது என்பதை காண்பதற்கும் ஜோபோவுக்கு ஆவல் எழுந்தது. இதையடுத்து, ஜோபோவுடன் எமது குழுவினர் வரும் ஜனவரியில் சென்னைக்கு விசிட் அடிக்கவும் முடிவு செய்திருக்கிறோம்.
ஜர்னலிசத்திற்கு வரும் முன் பைக் ரேஸராகவும் இருந்த ஜோபோவிற்கு பைக்கில் பயணம் செய்வதே விருப்பமான விஷயம். எங்கு சென்றாலும் பைக்கில் பயணிக்க விரும்புவார். ஆனால், இந்த முறை அவரிடம் கொல்கத்தா துர்காபூஜை கொண்டாட்டத்தை காண்பதற்காக டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் ஒன்றை ஏற்பாடு செய்து தந்திருக்கிறோம்.

ஸ்கூட்டரிலா என்பது போல் பார்த்துவிட்டு வழக்கமான ஒரு சிரிப்பை கொடுத்துவிட்டு ஓகே என்ற பதிலுடன் துர்காபூஜை கொண்டாட்டத்தில் பங்கேற்க நாளை கொல்கத்தா புறப்படுகிறார். அங்கு 4 நாட்கள் தங்கியிருந்து துர்காபூஜை கொண்டாட்டங்களில் பங்கேற்க இருக்கிறார்.
மேலும், கொல்கத்தா நகரில் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் துர்காதேவி சிலை வைக்கப்பட்டிருக்கும் பந்தல்களுக்கும், செல்ல இருக்கிறார். ஜோபோவுடன் எமது ஆங்கிலப் பிரிவின் செய்தியாளர் ராஜ்கமல் மற்றும் புகைப்பட நிபுணர் அபிஜித் விளங்கில் ஆகியோரும் செல்கின்றனர்.
எமது குழுவினர் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பயணிக்க இருக்கிறோம். இந்த பயணத்தின் தொடர்ச்சியாக, சிறப்புத் தகவல்கள் அடங்கிய செய்தித் தொகுப்பை அடுத்த சில நாட்களில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.


Click it and Unblock the Notifications








