மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் தானியங்கி சூப்பர் பைக்!
ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் உலகின் முதல் அதிவேக சூப்பர் பைக் துபாயில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.
ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார் உள்ளிட்ட வாகனங்களை வடிவமைப்பதில் பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
அதேபோன்று, சமநிலைப்படுத்தி தொழில்நுட்பத்துடன் செல்லும் மோட்டார்சைக்கிள் மாடல்கள் கூட கான்செப்ட் நிலை மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், இருசக்கர வாகனங்களில் ஓட்டுனர் கட்டுப்பாடு இல்லாமல் இயங்குவது என்பது சாத்தியமில்லாததாக கருதப்படும் விஷயம். ஆனால், அந்த நினைப்பை தவிடுபொடியாக்கி இருக்கிறது டென்மார்க் நாட்டை சேர்ந்த நெர்வ் என்ற நிறுவனம்.

இந்த வகை மோட்டார்சைக்கிள்களுக்கு தகுந்த மார்க்கெட் வளைகுடா நாடுகள்தான் என்ற நோக்கத்தில், தற்போது துபாயில் உள்ள கிராண்ட் ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்து வரும் கல்ஃப் டிராஃபிக் 2016 என்ற கண்காட்சியில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

இது ஓட்டுனர் உதவி இல்லாமல் இயங்கும் மோட்டார்சைக்கிள் மட்டுமல்ல, உலகின் அதிவேக மோட்டார்சைக்கிள் மாடலாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இதன் ரகத்தில் உலகின் அதிவேக, அதி செயல்திறன் மிக்க மோட்டார்சைக்கிள் மாடலாகவும் குறிப்பிடப்படுகிறது.

மணிக்கு 300 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 1.5 வினாடிகளில் தொட்டுவிடும்.

இது சாத்தியமா என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், இதனை உண்மை என்கிறது நெர்வ் நிறுவனம். இதுபோன்று பல புதுமையான தயாரிப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில், நடைமுறை பயன்பாட்டில் சிறப்பான மாடல்கள் நிச்சயம் சிறப்பான எதிர்காலத்தை பெறும்.


Click it and Unblock the Notifications








