ஹார்லி டேவிட்சன் வாடிக்கையாளர்கள் நடத்திய புரட்சி போராட்டம்!
ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிளில் பிரேக் பிரச்னையை சரிசெய்து தர வலியுறுத்திய, ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்திற்கு எதிராக வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஹார்லி டேவிட்சன் பிராண்டின் மிக அதிகம் விற்பனையாகும் மாடல் ஸ்ட்ரீட் 750. குறைவான பட்ஜெட் கொண்ட ஹார்லி டேவிட்சன் மாடல் என்பதால், வாடிக்கையாளர்களின் பேராதரவை பெற்றது.
ரூ.5.43 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைப்பதால், குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை பெற்றது. ஆனால், இப்போது ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிள் புதிய பிரச்னையில் சிக்கி இருக்கிறது.

ஆம், கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிள்களில் பிரேக் பிரச்னை இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இதனை ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் கவனத்திற்கும் பலமுறை கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அந்த நிறுவனம் பிரேக் பிரச்னையை சரிசெய்து தருவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால், ஏமாற்றம் அடைந்த சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் இப்போது அந்த நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.

உயிர்களுடன் விளையாடதே, உடனடியாக பிரச்னைக்குரிய ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிளை திரும்ப பெறு அல்லது திரும்பி செல் என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தியவாறு சமீபத்தில் வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும், இதனை வலியுறுத்தும் விதமாக டீ - ஷர்ட்டுகளையும் அவர்கள் அணிந்து எதிர்ப்பை காட்டி வருகின்றனர். இத்துடன் நிற்கவில்லை. தங்களது கார்களிலும் பிரேக் கோளாறை சரி செய்து கொடுக்குமாறு பிரச்சார வாசக ஸ்டிக்கர்களை ஒட்டி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதனால், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திடமிருந்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் தரப்படவில்லை.


Click it and Unblock the Notifications








