எஞ்சின் பிரச்னை.... ஹிமாலயன் மாடல் பைக்குகளை திரும்பப் பெற ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முடிவு?
இந்தியாவின் புல்லட் மார்க்கெட்டில் முடிசூடா மன்னனாக விளங்குபவை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள்தான். அந்த மாடல் பைக்குகளை வைத்திருந்தாலே நீங்க செம கெத்தாக ஃபீல் ஆவீர்கள்.
அட்ராக்ஷனான லுக், கம்பீரம், திரும்பிப் பார்க்க வைக்கும் சவுண்ட் என அனைவரது கவனத்தையும் கவர்ந்திழுந்த ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் புதிதாகச் சேர்ந்தது ஹிமாலயன் மாடல்.

அண்மையில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இந்த பைக் அறிமுகமானபோது எல்லோரது பார்வையும் அதன் மேல்தான் இருந்தது. ரூ.1.63 லட்சம் என இதன் விலை நிர்ணயிக்கப்பட்டது (மும்பை எக்ஸ் ஷோ ரூம் விலை). இரண்டு கலர் ஆப்ஷனில் இந்த மாடல் சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
எல்லாம் சரி, இதிலென்ன புது விஷயம் என்கிறீர்களா? சக்கைப்போடு போடும் என்று எதிர்பார்த்த ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், திடீரென பின்னடைவைச் சந்தித்துள்ளது.
எஞ்சின் மற்றும் கிளட்ச் சிஸ்டத்தில் சில பிரச்னைகள் ஏற்படுவதாகவும், இதனால், எஞ்சினில் சத்தம் வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, அதைப் பரிசோதித்துப் பார்த்த நிறுவனம், இந்தக் குறைபாடுகள் ஹிமாலயன் மாடலில் இருப்பது உண்மை என்று உறுதி செய்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த மாடல்களைத் திரும்பப் பெறுவது என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையும் பெற்ற ராயல் என்ஃபீல்டு நிறுவனம், ஹிமாலயன் மாடல்களைத் திரும்பிப் பெற்றுக் கொண்டு அதற்கு புதிய பைக்குகளை வழங்கும் என்றும், அதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்காது என்றும் தெரிகிறது.
மொத்தம் எத்தனை பைக்குகள் அவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளப் போகின்றன என்பது குறித்த தெளிவான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எது எப்படியோ, வாடிக்கையாளர்களின் சேவையில் சமரசம் செய்து கொள்ளாத ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இந்தப் பிரச்னைக்கு விரைவில் நல்ல தீர்வை அளிக்கும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








