ஜனவரியில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது புதிய கேடிஎம் ட்யூக் 390 பைக்!
இந்திய இளைஞர்களின் பெரும் விருப்பத்திற்குரியவை கேடிஎம் பைக் மாடல்கள். குறிப்பாக, ட்யூக் வரிசை மாடல்கள் இந்தியாவில் பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கின்றது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையிலும், சந்தைப் போட்டியை மனதில் வைத்தும் வடிவமைப்பில் மாறுதல்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் கேடிஎம் ட்யூக் 390 பைக் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாத துவக்கத்தில் இத்தாலியின் மிலன் நகரில் நடந்த மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வரும் ஜனவரி மாதத்தில் இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தற்போதைய மாடலைவிட ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை கூடுதலான விலையில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டெலிவிரி துவங்கப்படும்.

புனே நகரில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆலையில்தான் கேடிஎம் பைக்குகள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. எனவே, புதிய ட்யூக் 390 பைக்கும் அங்குதான் அசெம்பிள் செய்யப்படும்.

தற்போதைய கேடிஎம் ட்யூக் 390 பைக் மாடலைவிட புதிய மாடல் கூர்மையான வடிவமைப்புடன் சீற்றம் அதிகரித்துள்ளது. சூப்பர் ட்யூக் 1290 பைக்கின் டிசைன் தாத்பரியங்கள் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக, இதன் பிளவுப்பட்ட ஹெட்லைட் அமைப்பு மிக மிக கவர்ச்சியாக உள்ளது. மிரட்டும் தோற்றத்தை தரும் பெட்ரோல் டேங்க் வடிவம், புதிய சைலென்சர் ஆகியவை முக்கியமான மாற்றங்கள். சாவி போடுவதற்கான இக்னிஷன் அமைப்பு பெட்ரோல் டேங்க் பக்கத்திற்கு வந்துள்ளது.

ஆரஞ்ச் வண்ணம் சற்று தூக்கலாகவே இருக்கிறது. இந்த பைக்கில் புதிய டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாகவும் இருக்கும்.

இந்த பைக்கின் எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. 44 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 373.3சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. விலை அதிகம் இருந்தாலும், டிசைன் மிக கவர்ச்சியாக இருப்பதால், கேடிஎம் ட்யூக் 390 பைக்கிற்கு வழக்கத்தைவிட சற்று கூடுதல் வரவேற்பு ஏற்படும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








