18,387 பைக்குகளைத் திரும்பப் பெற இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் முடிவு...!!
சர்வதேச டூ வீலர் உலகின் மாஸ் ஹீரோவாக விளங்குபவை இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பைக்குகள்தான். சாலையில் அந்த மாடல் பைக்குகள் சென்றாலே தேர் பவனி போல பார்ப்பவர் கண்கள் எல்லாம் அதன் மீதுதான் இருக்கும். இந்தியாவிலும் அந்த மாடல்களுக்கு ஏகப்பட்ட மவுசு இருக்கத்தான் செய்கிறது.
அதனால்தான், தனது அனைத்து மாடல்களையும் இங்கு அறிமுகம் செய்துள்ளது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம். அப்படி பேரும், புகழுமாக கெத்தாக வலம் வந்த அந்நிறுவனம், தற்போது புதிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது.

இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தயாரித்த பைக்குகளில் பெரும்பாலானவை அடிக்கடி தீ பிடித்து எரிவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. இக்னிஷன் சிஸ்டத்தில்தான் பிரச்னை உள்ளதாக கடைசியில் கண்டறியப்பட்டது.
அதிலும், குறிப்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் 2015-ஆம் ஆண்டு ஜூன் 16 வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட எஞ்சின்களில்தான் இத்தகைய பிரச்னை ஏற்படுவதாகத் தெரிகிறது.
இதையடுத்து விற்பனை செய்யப்பட்ட 18,367 பைக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது அந்த நிறுவனம். தண்டர் ஸ்ட்ரோக் 111 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள ரோட் மாஸ்டர், சிஃப்டெய்ன், விண்டேஜ், டார்க் ஹார்ஸ், சீஃப் கிளாசிக், சிஃப்டெய்ன் டார்க் ஹார்ஸ் உள்ளி்ட்ட மாடல்களில் இந்தப் பிரச்னை எழுந்துள்ளதாகத் தெரிகிறது.
எஞ்சினில் தீப்பிடித்த வாகனங்களை, அருகில் உள்ள டீலர்ஷிப் சென்டர்களுக்குச் சென்று இலவசமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நம் நாட்டிலும் அந்த மாடல் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், பிரச்னைக்குரிய வண்டிகளைத் திரும்பப் பெறுதாக இங்கு இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் அறிவிக்கவி்ல்லை. விரைவில் அப்படி ஓர் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என எதி்ர்பார்க்கப்படுகிறது.
அல்ட்ரா மாடர்னான டிசைன் மற்றும் இளைஞர்களின் ஏகோபித்த வரவேற்பு ஆகியவற்றைக் கொண்டிருந்த இந்த வாகனத்தில் இத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது, இந்தியா மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








