விரைவில் விற்பனைக்கு வரும் 750சிசி ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்!
அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய மோட்டார்சைக்கிள் மாடலை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதிசக்திவாய்ந்த இந்த புதிய மோட்டார்சைக்கிள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் பாரம்பரியம் மிக்க ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கான மவசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 350சிசி மற்றும் 500சிசி ரகத்தில் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், வர்த்தகத்தை விரிவாக்கவும், சர்வதேச அளவில் வாடிக்கையாளர்கள் வட்டத்தை விரிவுப்படுத்தும் நோக்கிலும் சக்திவாய்ந்த புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.

அதில், 750சிசி ரகத்தில் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை அந்த நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது இந்த மோட்டார்சைக்கிள் தீவிரமாக சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதன் ஸ்பை படங்களும் ஏற்கனவே வெளியாகி இருந்தன. ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளின் அடிப்படையில் இந்த புதிய மாடல் வடிவமைக்கப்பட்டு இருப்பது சோதனை ஓட்டங்கள் மூலமாக தெரிய வந்தது.

இந்த புதிய மோட்டார்சைக்கிளில் இரட்டை சிலிண்டர் கொண்ட 750சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இரட்டை சிலிண்டர் எஞ்சின் என்பதுடன், மிகவும் சக்திவாய்ந்த மாடலாக இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த புதிய மாடலின் எஞ்சின் அதிகட்சமாக 50 முதல் 60 என்எம் வரை டார்க் திறனை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 மோட்டார்சைக்கிளுடன் போட்டி போடும் வாய்ப்புள்ளது.

இந்த புதிய மோட்டார்சைக்கிளை வரும் மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு கொண்டு வர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நம் நாட்டு மார்க்கெட் மட்டுமின்றி, சர்வதேச சந்தையிலும் மிக வலுவான வாடிக்கையாளர்களை பெரும் நோக்கில் இந்த புதிய மோட்டார்சைக்கிளை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்கிறது.

மேலும், சென்னையில் உள்ள மோட்டார்சைக்கள் வடிவமைப்பு மையத்தை மேம்படுத்தவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் ரூ.600 கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








