டுகாட்டி நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சியில் பஜாஜ்- கேடிஎம் கூட்டணி தீவிரம்!
இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
டுகாட்டி நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருப்பதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறி இருக்கிறார்.

இத்தாலியை சேர்ந்த டுகாட்டி நிறுவனம் சூப்பர் பைக் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. தற்போது இந்த நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆடி கார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டுகாட்டி நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு ஆடி கார் நிறுவனம் முடிவு செய்தது. இதுகுறித்து வெளியான அறிவிப்பை தொடர்ந்து பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் டுகாட்டி நிறுவனத்தை வாங்குவதற்கு ஆடி கார் நிறுவனத்தை அணுகி வருகின்றன.

குறிப்பாக, டுகாட்டி சூப்பர் பைக் நிறுவனத்தை வாங்குவதற்கு இந்தியாவை சேர்ந்த பைக் தயாரிப்பு நிறுவனங்கள் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. ராயல் என்ஃபீல்டு, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்கள் டுகாட்டியை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது குறித்து செய்திகள் வெளியாகின.

தற்போது டுகாட்டி சூப்பர் பைக் நிறுவனத்தை வாங்குவதற்கு பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது தெரிய வந்துள்ளது. தனது கீழ் செயல்பட்டு வரும் ஆஸ்திரிய நாட்டு நிறுவனமான கேடிஎம் பைக் நிறுவனத்தின் மூலமாக டுகாட்டி நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளில் பஜாஜ் ஆட்டோ இறங்கி இருக்கிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ்," டுகாட்டி நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான திட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், இதனை நிச்சயமாக கூற இயலாது. ஒருவேளை, டுகாட்டி நிறுவனத்தை கையகப்படுத்தும் வெற்றி பெற்றால், அது நிறுவனத்திற்கு பல வகைகளில் பல்வேறு புதிய வாய்ப்புகளை அளிக்கும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், டுகாட்டி நிறுவனத்தை வாங்குவதற்கு நிதி ஆதாரம் உள்ளிட்ட அனைத்தும் தயாராக இருக்கிறது," என்று கூறி இருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன விற்பனை மார்க்கெட்டுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. தற்போது சாதாரண ரக பைக்குகள் மட்டுமின்றி, ஸ்போர்ட்ஸ் ரகம் மற்றும் சூப்பர் பைக் ரக பைக்குகளுக்கு இந்தியாவில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது.

இதனை பயன்படுத்திக் கொள்வதற்கு இந்திய நிறுவனங்கள் புதிய ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும், வர்த்தகத்தை விரிவாக்கும் நோக்கில் ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் சக்திவாய்ந்த பைக் தயாரிப்பிலும் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளன.

அதேபோன்று, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சக்திவாய்ந்த புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை தயாரிக்க முனைப்பு காட்டி வருகிறது. இந்த வேளையில், டுகாட்டி நிறுவனத்தை கையகப்படுத்தினால், அது சூப்பர் பைக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளின் தொழில்நுட்பத்தை பெறுவதற்கு இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.

புதிய பிரிமியம் பைக்குகளுடன் வெளிநாடுகளில் தடம் பதிப்பதற்கும் இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, டுகாட்டி நிறுவனத்தை கைப்பற்றுவதில் ராயல் என்ஃபீல்டு, பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.


Click it and Unblock the Notifications








