மீண்டும் சென்னையில் நடக்கும் ஆசிய ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் பைக் பந்தயம்!
ஏசியா ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கான 5வது சுற்று பைக் பந்தயம் சென்னையில் நடந்து வருகிறது.
ஆசிய பிராந்திய அளவிலான ஏசியா ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கான 5வது சுற்று பைக் பந்தயம் சென்னையில் நடந்து வருகிறது. இந்த பைக் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த சங்கர் சரத் குமார் மற்றும் ராஜீவ் சேது ஆகிய இரண்டு வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஏசியா ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் முதல் தர பைக் பந்தயம் ஆசிய பிராந்திய நாடுகளில் பிரபலமானது. வேர்ல்டு பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளை இந்த பந்தயம் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், 4 ஆண்டுகள் கழித்து இந்த பந்தயம் மீண்டும் சென்னையில் உள்ள மோட்டார் வாகன பந்தய களத்தில் நடத்தப்படுகிறது. இந்த பைக் பந்தயத்தில் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா, வியட்நாம், தாய்பேய் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்கள் பங்கு கொண்டுள்ளனர்.

நேற்று துவங்கிய இந்த போட்டிகள் நாளை வரை மூன்று நாட்கள் நடக்கிறது. மூன்று பிரிவுகளில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. சூப்பர்ஸ்போர்ட்ஸ் 600சிசி, ஏசியா புரொடெக்ஷன் 250சிசி மற்றும் அண்டர்போன் 150சிசி ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்து வருகின்றன.

மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் தலைவர் அஜித் தாமஸ் கூறுகையில்," மீண்டும் சென்னையில் ஏசியா ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். ஆசிய அளவில் சிறந்த வீரர்களை இனம் கண்டு சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கு இந்த போட்டிகள் உதவும்," என்று கூறினார்.

இந்த போட்டிகள் மூலமாக இந்தியாவை சேர்ந்த இளம் வீரர்கள் உலக அளவில் செல்வதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. இந்த போட்டியில் பங்கேற்றிருக்கும் சங்கர் சரத், இந்த போட்டிகளை மிகுந்த எதிர்பார்ப்பையும், த்ரில்லையும் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மற்றொரு வீரரான ராஜீவ் சேது, இந்த போட்டிகளை பயிற்சி பட்டறை போலவே கருதுகிறேன். இந்த போட்டிகளில் இருந்து அதிகம் கற்றுக்கொண்டு மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறி இருக்கிறார். நிச்சயம் இந்த போட்டிகள் இந்தியாவின் இளம் பைக் பந்தய வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பை நல்கி தரும் என்பதில் ஐயமில்லை.

சங்கர் சரத்குமார் மற்றும் ராஜீவ் சேது ஆகியோருக்கு ஹோண்டா நிறுவனம் ஸ்பான்சர் அளிக்கிறது. இந்த பைக் பந்தயத்தின்போதே ஹோண்டா ஒன் மேக் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டியிலும் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.


Click it and Unblock the Notifications








