கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் பயணிக்கும் இந்தியன் மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள்!
பெண் குழந்தை கல்வி மேம்பாட்டுக்காக பெங்களூரை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் உரிமையாளர் குழுவினர் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பெண் குழந்தை கல்விக்கு நிதி திரட்டும் நோக்கில், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு பயணம் துவங்கியிருக்கின்றனர் பெங்களூரை சேர்ந்த இந்தியன் மோட்டார்சைக்கிள் உரிமையாளர் குழுவினர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

'வீல்ஸ் ஆஃப் சேஞ்ச்' என்ற பெயரில் இந்தியன் மோட்டார்சைக்கிள் சார்பில் திட்டமிடப்பட்டிருக்கும் இந்த பயணம் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. பெங்களூரை சேர்ந்த இந்தியன் ரோட்மாஸ்டர் மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களான அனுராக் ஸ்ரீவத்சவா, நீலாத்ரி சாஹா மற்றும் பெர்னார்டு லஸார் ஆகியோர் இந்த பயணத்தில் பங்குகொண்டுள்ளனர்.

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை செல்லும் கே2கே என்று குறிப்பிடப்படும் இந்த மிக நீண்ட தூர மோட்டார்சைக்கிள் பயணத்தை மூவரும் மேற்கொண்டுள்ளனர். வழியில் பெண் குழந்தை கல்விக்காக நிதி திரட்டுவதோடு, 6 பள்ளிக்கூடங்களுக்கு நேரில் சென்று உதவிகளையும் செய்ய இருக்கின்றனர்.

பெங்களூரிலிருந்து இந்தியன் ரோட்மாஸ்டர் மோட்டார்சைக்கிளில் புறப்பட்ட அவர்கள் கன்னியாகுமரியிலிருந்து பயணத்தை முறைப்படி துவங்குகின்றனர். நாட்டின் 12 முக்கிய நகரங்கள் வழியாக இவர்கள் பயணிக்க இருக்கின்றனர்.

ஆரம்ப நிலை மற்றும் உயர் நிலை பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் குழந்தைகளுக்கு உதவும் நோக்குடன் இந்த பயணத்தை சிரத்தையுடன் மேற்கொள்ள இருக்கின்றனர்.

முதலாவதாக, பெங்களூர் கோடிஹள்ளியில் உள்ள ரெயின்போ பெண் குழந்தைகள் மறு வாழ்வு மையத்திற்கு சென்று உதவிகளை வழங்க இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி செல்ல இருக்கின்றனர்.

பெங்களூருவிலிருந்து கன்னியாகுமரி, ஹைதராபாத், கோல்ஹாப்பூர், மும்பை, ஆமதாபாத், உதய்பூர், ஜோத்பூர், டெல்லி, ஜலந்தர், அமிர்தசரஸ், ரன்பீல் சிங் புரா ஆகிய முக்கிய நகரங்களை தொட்டு காஷ்மீரில் பயணத்தை நிறைவு செய்ய இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








