ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக எதிர்பார்க்கப்படும் ஜாவா 350 மோட்டார்சைக்கிள்!
இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் புதிய ஜாவா 350 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஜாவா நிறுவனம் 1950களில் இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள் வர்த்தகத்தை துவங்கியது. ஐடியல் ஜாவா லிமிடேட் என்ற பெயரில் செயல்பட்ட ஜாவா நிறுவனம் மைசூரில் இருந்த ஆலையில் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தது.

வித்தியாசமான தோற்றம், அலாதியான சைலென்சர் சப்தம் போன்றவை அக்கால இளைஞர்களை சுண்டி இழுத்தது. ஆனால், போட்டியாளர்களுக்கு தக்கவாறு, மோட்டார்சைக்கிள்களை ஐடியல் ஜாவா நிறுவனம் மேம்படுத்த தவறியது.

இதனால், ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கான வரவேற்பு வெகுவாக குறைந்தது. இந்த சூழலில் மாசு பிரச்னை காரணமாக எஞ்சினை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில், தனது மோட்டார்சைக்கிள் உற்பத்தியை நிறுத்தியது ஜாவா.

அதேநேரத்தில், தொடர்ந்து ஜாவா பிராண்டுக்கு தனி ரசிகர் கூட்டம் இந்தியாவில் இருந்து வருகிறது. பலர் தங்களது ஜாவா மோட்டார்சைக்கிள்களை புதுப்பொலிவு கொடுத்து பாதுகாத்து வருவதுடன் சிலர் பயன்படுத்தியும் வருகின்றனர்.

இந்த சூழலில் ஜாவா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை மஹிந்திரா நிறுவனம் பெற்றிருக்கிறது. இதனால், இந்தியாவில் மீண்டும் ஜாவா பிராண்டு மறுபிறப்பு எடுக்க உள்ளது.

மேலும், புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களின் அறிமுக விபரம், மாடல்கள் குறித்த சில விபரங்களையும் மஹிந்திரா வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, வரும் 2019ம் ஆண்டு துவக்கத்தில் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும், தற்போது ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள மாடல், ஜாவா 350 மோட்டார்சைக்கிள்.

ஏனெனில், இது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு நேரடி போட்டியாக கருதப்படுவதே இதற்கு காரணம். இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய சிறப்புத் தகவல்களை காணலாம்.

ஐரோப்பிய நாடுகளில் விற்பனையில் இருக்கும் ஜாவா 350 மோட்டார்சைக்கிளின் டிசைன் 1960 மற்றும் 70களில் விற்பனையில் இருந்த ஜாவா மோட்டார்சைக்கிள்களின் டிசைனை பிரதிபலிப்பதாக உள்ளது. வட்ட வடிவ ஹெட்லைட், செவ்வக வடிவ எரிபொருள் கலன், தட்டையான இருக்கை போன்றவை முக்கியமாக இருக்கும்.

இரட்டை ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் போன்றவை கொடுக்கப்பட்டு இருக்கும்.

பழமையை நினைவூட்டும் வகையில், இரட்டை அனலாக் மீட்டர்களுடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்று இருக்கும். ஹெட்லைட், ஹேண்டில்பார், ரியர் வியூ மிரர்களில் க்ரோம் பூச்சுடன் பளபளக்கும்.

அடுத்து, டிசைனில் பழமையாக இருந்தாலும் நவீன யுகத்துக்கு ஏற்ற தொழில்நுட்ப அம்சங்களை இந்த மோட்டார்சைக்கிள் பெற்றிருக்கும். முன்புற சக்கரத்தில் 305மிமீ டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு இருக்கும்.

பின்புறத்தில் டிரம் பிரேக்கும், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கொண்டதாகவும் வருகிறது. முன்புறத்தில் 19 அங்குல சக்கரமும், பின்னால் 18 அங்குல சக்கரமும் பொருத்தப்பட்டு இருக்கும்.

ஜாவா 350 மோட்டார்சைக்கிளில் 17 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் 154 கிலோ எடை கொண்டது.

ஜாவா 350 மோட்டார்சைக்கிளில் 350சிசி ஏர்கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 26 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஜாவா 350 மோட்டார்சைக்கிளில் இருக்கும் 350சிசி எஞ்சின் யூரோ-4 மாசு தரக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்டது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் தற்காலத்திற்கு ஏற்ற சிறப்புகளை பெற்றிருக்கிறது.

வரும் பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள் காட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், ஜாவா 350 மோட்டார்சைக்கிளும் இடம்பெறும் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








