க்ளீவ்லேண்ட் மோட்டார்சைக்கிள்கள் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது!
அமெரிக்காவை சேர்ந்த க்ளீவ்லேண்ட் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. புனே நகரில் தனது மோட்டார்சைக்கிள் உற்பத்தி ஆலையையும் அமைத்தது.
அமெரிக்காவை சேர்ந்த க்ளீவ்லேண்ட் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் க்ளீவ்லேண்ட் நிறுவனம் இந்தியாவுக்கான மோட்டார்சைக்கிள் மாடல்களை காட்சிக்கு வைத்திருந்தது. ஏஸ் வரிசையில் ஏஸ் டீலக்ஸ், ஏஸ் ஸ்க்ராம்ப்ளர் மற்றும் ஏஸ் கஃபே 250 ஆகிய மூன்று மாடல்களை காட்சிக்கு வைத்திருந்தது.

இந்த மோட்டார்சைக்கிள்களில் 229சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 15.4 எச்பி பவரையும், 16 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்லதாக இருக்கிறது. இந்த பைக்குகளில் முன்புறத்தில் 298மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 210மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மூன்று மாடல்களிலுமே எஞ்சின் உள்ளிட்ட முக்கிய உதிரிபாகங்கள் ஒன்றுதான். டிசைனில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தநிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த லெய்ஸ் மேடிசன் மோட்டார் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இந்தியாவில் கால் பதிக்க இருப்பதாக க்ளீவ்லேண்ட் நிறுவனம் அறிவித்தது.

இந்தியாவில் வர்த்தக விவகாரங்களை லெய்ஸ் மேடிசன் மோட்டார் ஒர்க்ஸ் நிறுவனம் கையாள இருப்பதாகவும் அறிவித்தது. இந்த நிலையில், புனே நகரில் தனது மோட்டார்சைக்கிள் உற்பத்தி ஆலையையும் அமைத்தது.

இந்த ஆலையில் முதல் மாடலாக மிஸ்ஃபிட் மோட்டார்சைக்கிளின் உற்பத்தி துவங்கி இருக்கிறது. அடுத்து ஏஸ் வரிசை மாடல்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. சீனாவில் இருந்து மோட்டார்சைக்கிள் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து இந்த ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

புனே ஆலையில் உற்பத்தி துவங்கியதற்காக சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டுள்ளது. உற்பத்தி பிரிவில் வெளிவந்த முதல் க்ளீவ்லேண்ட் மிஸ்ஃபிட் மோட்டார்சைக்கிளின் படங்களையும் லிங்க்டு இன் இணையப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.

படங்களை வெளியிட்டதுடன், அந்த பதிவில் புனே ஆலையில் சிறப்பு பூஜையுடன் இந்தியாவில் எமது வர்த்தக பயணத்தை இனிதே துவங்கி இருக்கிறோம். விரைவில் க்ளீவ்லேண்ட் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது," என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் க்ளீவ்லேண்ட் வர்த்தகத்தை துவங்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஹார்லி டேவிட்சன், இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் வரிசையில் மேலும் ஒரு அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை துவக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








