ராயல் என்ஃபீல்டு தயாரிக்கும் முதல் மின்சார பைக் இதுதான்... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
ராயல் என்ஃபீல்டு தயாரிக்கும் முதல் மின்சார பைக் இதுதான்... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
எதிர்காலத்தில் வாகன பயன்பாடு அனைத்தும் மின்சார ஆற்றலுக்கு மாறும் நிலை உள்ளதால், பல்வேறு நிறுவனங்கள் அதற்கான கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மின்சார ஆற்றலை வாகனங்களுக்கு வழங்கும் நடைமுறை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பிறகு அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட சில ஆசிய நாடுகளிலும் இந்த பணிகள் வேகம் எடுத்துள்ளது.

இதன்படி மஹிந்திரா, பஜாஜ், ஹீரோ உட்பட உள்ளூர் நிறுவனங்கள் முதல் மாருதி சுஸுகி, ஃபோக்ஸ்வேகன், ஹோண்டா போன்ற நிறுவனங்கள் இந்தியாவிற்கான மின்சார வாகன தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே மஹிந்திராவின் மின்சார கார்கள் பயன்பாட்டிலுள்ள நிலையில், இந்த பட்டியலில் புதியதாக இணைந்துள்ளது ராயல் என்ஃபீல்டு.
நம் நாட்டிற்கு ஏற்றவாறான மின்சார பைக்கை ராயல் என்ஃபீல்டு தயாரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.

க்ரூஸர் ரக இருசக்கர வாகன விற்பனையில் நம் நாட்டையே கலக்கி வரும் நிறுவனம் என்றால் அது ராயல் என்ஃபீல்டு தான். அது தயாரிக்கும் மின்சார இருசக்கர வாகனம் தற்போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.

இந்நிறுவனம் தயாரிக்கும் மின்சார ஆற்றல் கொண்ட பைக், புல்லட் மாடலில் களமிறங்கும் என ஆட்டோதுறை சார்ந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த 2010ம் ஆண்டு இறுதியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 49,944 என்ற எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை திறனை இந்தியாவில் பெற்றிருந்தது.

ஆனால் தொடர்ந்து அதன் பைக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மவுசு அதிகரித்ததால் 2017ம் ஆண்டு முடிவில் 7,52,881 யூனிட் வாகன விற்பனையை ராயல் என்ஃபீல்டு பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் உருவாகியுள்ள இந்த விற்பனை திறனை தக்கவைத்துக்கொள்ள, எதிர்கால வாகன விற்பனைக்கு ஏற்றவாறு மின்சார ஆற்றலில் பைக்குகளை தயாரிக்க ராயல் என்ஃபீல்டு ஆயத்தமாகி உள்ளது.

அதன் ஒருபகுதியாக ராயல் என்ஃபீல்டிற்கு இந்தியளவில் விற்பனை திறனை தொடர்ந்து அதிகரித்து வரும் புல்லட் மற்றும் கிளாசிக் போன்ற மாடல்களில் மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்கள் வெளிவரவுள்ளன.

இதுதவிர 2020ம் ஆண்டு முதல் பிஎஸ் 6 விதிக்கு உட்பட்டு இயங்கும் எஞ்சின்களுக்கு மட்டுமே அனுமதி என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன் காரணமாக தற்போது பிஎஸ்6 எஞ்சின் தேர்விலும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வெளியிடவுள்ளது.

விரைவில் இதற்கான புதிய பிளாட்ஃப்பார்மை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி எதிர்கால சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக கார், வர்த்தக வாகனங்கள் முதலானவை மின் மோட்டாரில் இயங்கும் வகையில் தயாரிக்கப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications








