'ஹீரோ' ஆனது 'டிவிஎஸ்'.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை..
கேரள மாநிலம் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கேரள முதல் அமைச்சரின் நிவாரண நிதிக்கு, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கேரள முதல் அமைச்சரின் நிவாரண நிதிக்கு, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கேரள மாநிலத்தில், வரலாறு காணாத வகையில் கன மழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்பட 10 மாவட்டங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்கள்தான், மிகப்பெரிய அளவில் சேதத்தை சந்தித்துள்ளன. கேரள மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 1924ம் ஆண்டுக்கு பிறகு, கேரள மாநிலம் எதிர்கொள்ளும் 2வது மிகப்பெரிய வெள்ள பேரிடராக இது கருதப்படுகிறது.

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, பல்வேறு இடங்களில் இருந்து நிவாரண நிதி குவிந்து வருகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய சேதத்தை சரி செய்ய வசதியாக, அரசியல் கட்சியினர், நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலர், நன்கொடை வழங்கி வருகின்றனர்.

இந்த பட்டியலில், டிவிஎஸ் மோட்டார் கம்பெனியும் இணைந்துள்ளது. கேரள முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. இதற்கான காசோலை, கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயனிடம் வழங்கப்பட்டது.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் சமூக பிரிவான சீனிவாசன் சர்வீஸஸ் டிரஸ்ட்டின் (SST) தலைமை செயல் அதிகாரி ஸ்வரன் சிங், கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயனை சந்தித்து, 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இதுகுறித்து ஸ்வரன் சிங் கூறுகையில், ''கடினமான நேரத்தை எதிர்கொண்டு வருபவர்களுக்கு உதவுவதுதான் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் நோக்கம். கேரள மக்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறோம். அங்கு நிலைமை வெகு விரைவில் சீராகும்'' என்றார்.

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலத்திற்கு, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிவாரண நிதி வழங்குவது இது முதல் முறையல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏற்பட்ட சமயங்களில் எல்லாம், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி உதவிக்கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








