இது ஸ்கூட்டர் இல்ல ஸ்கூட்டர் மாதிரி: அப்ரில்லாவின் புதிய 160 மேக்ஸி ஸ்கூட்டர் குறித்த சிறப்பு தகவல்!
அப்ரில்லா நிறுவனம், 155 சிசி திறன் கொண்ட புதிய ஸ்கூட்டர் ஒன்றை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டரில் கியர்பாக்ஸ் இணைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இத்தாலி நாட்டு நிறுவனமான பியாஜியோ, இந்தியாவில் வெஸ்பா மற்றும் அப்ரில்லா ஆகிய பிராண்ட்களில் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது. 150சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்த நிறுவனமும் இதுதான்.

இந்த நிறுவனம் தற்போது, 160சிசி திறன் கொண்ட ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணியில் அந்த நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை பைக்வேல் எனப்படும் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பியாஜியோ நிறுவனத்தின் சிஇஓ டியகோ கிராஃபி, "பியாஜியோ நிறுவனம், பிரத்யேகமாக இந்தியர்களுக்காக 200 சிசி திறனுடைய ஸ்கூட்டரை வடிவமைத்து வருவதாக தெரிவித்தார். அந்த ஸ்கூட்டர் அப்ரில்லா பேட்ஜில், இன்னும் 18 மாதங்களில் களமிறக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

பியாஜியோ நிறுவனம், அப்ரில்லா பிராண்டில் எஸ்ஆர் 150 மாடலைத்தான் முதல் முறையாக அறிமுகம் செய்தது. தொடர்ந்து, அப்ரில்லா எஸ்ஆர் 125சிசி ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வாறு, பல்வேறு ஸ்கூட்டர்கள் உட்பட பைக்குகளும் களமிறக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நிறுவனத்தின் பைக்குகளைக் காட்டிலும் ஸ்கூட்டர்களுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் மவுசு அதிகம். இதனால், பியாஜியோ நிறுவனம், பவர்புல்லான ஸ்கூட்டர்களையே இங்கு அதிகளவில் களமிறக்கி வருகின்றது.

இந்நிலையில்தான், புதிய பெர்ஃபார்மன்ஸ் ஸ்கூட்டரான அப்ரில்லா 160 மேக்ஸி மாடலை அந்த நிறுவனம் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான தயாரிப்பு நிலை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், அடுத்த வருடத்தின் தொடக்கத்திலோ அல்லது மத்தியிலோ, அந்த ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டரை அப்ரில்லா நிறுவனம், இத்தாலியில் உள்ள அதன் தொழிற்சாலையில் வைத்து தயாரித்து வருகின்றது. அந்தவகையில், அதன் ஸ்டைல், அம்சங்கள், சேஸிஸ் உள்ளிட்ட ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த தயாரிப்பு பணியும் இத்தாலி பொறியியல் கலை வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், என்னதான் இது இத்தாலி பொறியியல் கலையைக் கொண்டு உருவாக்கப்பட்டாலும், முழுக்க முழுக்க இந்தியர்களை மனதில் கொண்டே இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆகையால், இந்த ஸ்கூட்டர் இந்திய சாலை மட்டுமின்றி இந்திய இளைஞர்களின் டேஸ்டிற்கு ஏற்ப தோற்றத்தையும், சிறப்பம்சங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டரில் பியாஜியோ நிறுவனம், 155 சிசி திறனை வெளிப்படுத்தும் சிங்கிள்-சிலிண்டர் எஞ்ஜினைப் பொருத்த இருக்கின்றது. மேலும், இந்த எஞ்ஜினில் சிறப்பு நடவடிக்கையாக கியர்பாக்ஸ் பொருத்தப்பட இருப்பாதக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், இது ஸ்கூட்டர் இல்ல ஸ்கூட்டர் மாதிரியான ரகத்தில் கிடைக்கும் பைக் என வல்லுநர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

அப்ரில்லாவின் இந்த புதிய ஸ்கூட்டர் சுஸுகி நிறுவனத்தின் பர்க்மேன் 125 ஸ்கூட்டரை உத்வேகமாகக் கொண்டு தயாராகி வருகின்றது. ஆனால், அந்த ஸ்கூட்டரின் சிசி-யைக் காட்டிலும் அப்ரில்லா மேக்ஸி ஸ்கூட்டரில் அதிகம் சிசி கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இதன் எஞ்ஜினானது, பிஎஸ்-6 தரத்திற்கேற்ப ட்யூன் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
images for reference only


Click it and Unblock the Notifications








