இந்தியாவில் அறிமுகமாகிறது புதிய ஏப்ரிலியா 300சிசி ஸ்கூட்டர்?
கோவாவில் ஏப்ரிலியா நிறுவன டீலர்களுக்கான கூட்டம் நடந்தது. இதில், 150சிசி ரக பைக் மாடல்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்படும் ஏப்ரிலியா நிறுவனம் புதிய 300சிசி ஸ்கூட்டரை இந்திய டீலர்களுக்கான கூட்டத்தில் பார்வைக்கு வைத்திருந்தது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கோவாவில் ஏப்ரிலியா நிறுவன டீலர்களுக்கான கூட்டம் நடந்தது. இதில், 150சிசி ரக பைக் மாடல்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அதில், ஏப்ரிலியா நிறுவனத்தின் புதிய 300சிசி ஸ்கூட்டர் மாடலும் டீலர்களின் பார்வைக்கு நிறுத்தப்பட்டு இருந்தது.

சீனாவில் ஏப்ரிலியா நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமாக செயல்படும் ஸாங்ஷென் எஸ்ஆர் மேக்ஸ் 300 ஸ்கூட்டர்தான் தற்போது கோவா நிகழ்ச்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்கூட்டர் மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடலாக பிரம்மாண்ட தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

புதிய ஏப்ரிலியா எஸ்ஆர்300 ஸ்கூட்டரில் ட்வின் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி இன்டிகேட்டர்கள், பகல் நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்புற ஹெட்லைட்டுகளுக்கு நடுப்பகுதியில் உயர் துல்லிய தரத்தில் படம் பிடிக்கும் கேமரா ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கிறது. விண்ட் ஷீல்டு அமைப்பும் முன்புற தோற்றத்தை பிரம்மாண்டமாக்குகிறது.

ஏப்ரிலியா எஸ்ஆர் மேக்ஸ் 300 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய ஸ்கூட்டரில் இரண்டு அடுக்கு அமைப்புடைய ஃபுட்போர்டு இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டரில் அகலமான இருக்கை அமைப்பு இடம்பெற்றுள்ளது. அதிக வீல் பேஸ் கொண்டிருப்பதால் சிறப்பான இடவசதியை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து இருப்பவரும் பெற முடியும்.

மிக நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ப இந்த ஸ்கூட்டரில் 9.0 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புளுடூத் இணைப்பு வசதி, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இருக்கைக்கு கீழே மிகச் சிறப்பான பூட் ஸ்பேஸ் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 15.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

இந்த மேக்ஸி ஸ்கூட்டரில் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 278சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 22 பிஎச்பி பவரையும், 23 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இறுக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது. அதேபோன்று, முன்சக்கரத்தில் 260 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டியூவல் சேனல் ஏபிஎஸ் வசதி உள்ளது.

இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் 15 அங்குல சக்கரத்தில் 120/70 டயரும், பின்புறத்தில் 14 அங்குல சக்கரத்தில் 140/60 டயரும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டயர்கள் ஸ்கூட்டரின் தோற்றத்திற்கு இணையானதாக பொருந்தி போகின்றன.

கோவாவில் நடந்த டீலர் கூட்டத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை களமிறக்குவதற்கான முதற்கட்ட முயற்சியில் ஏப்ரிலியா இறங்கி இருப்பதாக தெரிகிறது. எனினும், உடனடியாக கொண்டு வரும் எந்த திட்டமும் அந்த நிறுவனத்திடம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் நிச்சயம் இந்தியா வரும் மாடல்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image Courtesy: Motoroids


Click it and Unblock the Notifications








