ஏப்ரிலியா எஸ்டிஎக்ஸ் 150 பைக் இந்தியாவில் தரிசனம்!
ஏப்ரிலியா எஸ்டிஎக்ஸ் 150 பைக் முதல்முறையாக இந்தியாவில் தரிசனம் தந்துள்ளது. படங்கள், கூடுதல் தகவல்களை காணலாம்.

அண்மையில் கோவாவில் நடந்த ஏப்ரிலியா டீலர்கள் கூட்டத்தில் அப்ரிலியா நிறுவனத்தின் புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது குறித்து செய்தி வழங்கி இருந்தோம். அதில், மற்றுமொரு மாடலாக ஏப்ரிலியா எஸ்டிஎக்ஸ் 150 பைக் மாடலும் அங்கு பார்வைக்கு நிறுத்தப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட படத்தை பைக்வாலே தளம் வெளியிட்டு இருக்கிறது.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் விற்பனையில் இருக்கிறது. இந்த பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு டீலர்கள் ஒப்புதல் தெரிவிப்பார்களா என்பதை நேரடியாக ஆய்வு செய்வதற்காகவே இந்த பைக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

மிக எளிமையான டிசைன் அம்சங்களுடன் நேக்கட் ரக பைக் மாடலாக இருக்கிறது. பெட்ரோல் டேங்க் கவரும் வகையில் இருக்கிறது. 17 அங்குல சக்கரங்கள், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

முன்சக்கரத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 104 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளது. எல்இடி இண்டிகேட்டர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இருந்தாலும் அனலாக் டாக்கோமீட்டர் உள்ளது.

ஏப்ரிலியா எஸ்டிஎக்ஸ் 150 பைக்கில் 149சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஏப்ரிலியா பிராண்டு இந்தியாவில் பிரிமீயம் அந்தஸ்துடன் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு டீலர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், ஏப்ரிலியாவின் பிராண்டு மதிப்பு குறைந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

அதேநேரத்தில், டீலர்கள் மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எஸ்ஆர் மேக்ஸ் 300சிசி மேக்ஸி ஸ்கூட்டருக்கும், ஆர்எஸ்150 ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கும் அதிக வரவேற்பு இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதனால், இந்த இரு மாடல்களையும் களமிறக்குவதற்கான திட்டத்தை ஏப்ரிலியா கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








