125 சிசி வருகையால் அதிரடி மாற்றம்... அதிகம் விற்பனையாகும் பல்சர் மாடல் எது தெரியுமா?
பஜாஜ் பல்சர் வரிசை பைக்குகளின் கடந்த நவம்பர் மாத விற்பனை குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த பஜாஜ் நிறுவனம் பல்வேறு இரு சக்கர வாகனங்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இதில், பல்சர் வரிசை பைக்குகள்தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பஜாஜ் பல்சர் வரிசை மோட்டார்சைக்கிள்களுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.

பஜாஜ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த இரு சக்கர வாகனங்களின் விற்பனையில், பல்சர் வரிசை பைக்குகளின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. இந்த சூழலில், கடந்த நவம்பர் மாதத்தில் பஜாஜ் பல்சர் வரிசை மோட்டார்சைக்கிள்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்சர் வரிசை மோட்டார்சைக்கிள்களில் அதிகம் விற்பனையாகியிருப்பது பல்சர் 150 மாடல்தான். பஜாஜ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 33,933 பல்சர் 150 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 53,524 பல்சர் 150 பைக்குகளை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

அதாவது பல்சர் 150 பைக்குகளின் விற்பனை 37 சதவீதம் குறைந்துள்ளது. மிகவும் விலை குறைவான பல்சர் 125 மாடலின் வருகை காரணமாகவே, பல்சர் 150 பைக்குகளின் விற்பனை இந்தளவிற்கு மிக கடுமையான சரிவை சந்தித்திருக்க கூடும். பல்சர் 125 மாடலின் பாப்புலாரிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

எனவே வருங்காலங்களிலும் பல்சர் 150 மாடலின் விற்பனை எண்ணிக்கையை பல்சர் 125 மாடல் சாப்பிட்டு விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பஜாஜ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 20,193 பல்சர் 125 மாடல்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் கடந்த நவம்பர் மாதம் பல்சர் என்எஸ் 200 மற்றும் ரெகுலர் 180 மாடல்கள் ஒட்டுமொத்தமாக 8,497 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன.

ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 9,122ஆக இருந்தது. இது 7 சதவீத வீழ்ச்சி ஆகும். மறுபக்கம் பஜாஜ் பல்சர் 220 மோட்டார்சைக்கிள் மாடலின் சிறப்பான விற்பனை தொடர்கிறது. பஜாஜ் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 5,645 பல்சர் 220 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து அசத்தியிருக்கிறது.

இந்த சூழலில், மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட 2020 பஜாஜ் பல்சர் வரிசை மோட்டார்சைக்கிள்கள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படுவதன் காரணமாக பவர் மற்றும் டார்க் அவுட்புட் சற்றே குறையலாம் என தெரிகிறது.

இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன. இதற்கு இன்னும் சுமார் 4 மாத காலமே இருப்பதால், அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் மாடல்களை வேக வேகமாக பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தி வருகின்றன. பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாக வாகனங்களின் விலை சற்று உயரும்.

பஜாஜ் நிறுவனம் பல்சர் பைக்குகளின் பிஎஸ்-6 வெர்ஷன்களை விற்பனைக்கு கொண்டு வர முயன்று வரும் சூழலில், ஹோண்டா நிறுவனமோ பிஎஸ்-6 டூ வீலர்களின் விற்பனையில் புதிய மைல்கல்லையே எட்டி விட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

வாகனங்கள் வெளியிடும் நச்சுப் புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைக்கும் விதத்தில், வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு நிகரான தரமுடைய எஞ்சினுடன் வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் கார், பைக் நிறுவனங்கள் முதல் கனரக வாகன நிறுவனங்கள் வரை தீவிரம் காட்டி வருகின்றன.

முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே பிஎஸ்-6 எஞ்சினுடன் கார், பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டன. அந்த வகையில், ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி 125 ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களிலும் பிஎஸ்-6 எஞ்சினை ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது.

இந்த வாகனங்கள் வாடிக்கையாளர் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றிருக்கின்றன. அதாவது, இதுவரை 60,000 பிஎஸ்-6 தரமுடைய ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி-125 டூ வீலர்களை விற்பனை செய்துள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹோண்டா விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறை மூத்த துணைத் தலைவர் யத்வீர் சிங் குலேரியா கூறுகையில்," ஹோண்டா மீது நம்பிக்கை வைத்திருக்கும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறோம். குறிப்பாக, பிஎஸ்-6 யுகத்திற்கு மாறுவதற்கு ஆதரவு அளிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.

ஹோண்டாவின் பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களுடன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கும் எங்களது ஆக்டிவா 125 மற்றும் எஸ்பி 125 வாகனங்கள் அமைதி புரட்சியை துவங்கி இருக்கின்றன.

ஏஜிஎஸ் ஸ்டார்ட்டர் மோட்டார், ஸ்மார்ட் பவர் ஆகிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பான எரிபொருள் சிக்கனம், 6 ஆண்டுகள் வாரண்டி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியான உணர்வை வழங்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் வருவதற்கு காலாண்டு காலத்திற்கு முன்னரே விற்பனையில் 60,000 எட்டியிருப்பது நிச்சயம் புதிய மைல்கல்லாக கருத முடியும்.

இந்தியா முழுவதும் இன்னும் முழுமையாக விற்பனைக்கு கொண்டு செல்லப்படாத நிலையிலேயே, இந்தளவு வரவேற்பு கிடைத்திருப்பது ஹோண்டா மீது வாடிக்கையாளர்களுக்கான நம்பிக்கையை பரைசாற்றுவதாகவே கருத முடியும்," என்று தெரிவித்தார்.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் பிஎஸ்-6 மாடலில் 124 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த மாடலுக்கு ரூ.67,490 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, எஸ்பி 125 பிஎஸ் பைக்கிற்கு ரூ.72,900 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எல்இடி ஹெட்லைட், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், பாஸ் லைட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.


Click it and Unblock the Notifications








