பஜாஜ் - டிவிஎஸ் இடையிலான காப்புரிமை பிரச்னை முடிவுக்கு வந்தது
காப்புரிமை மீறல் தொடர்பாக பஜாஜ் - டிவிஎஸ் இடையே நீடித்து வந்த பிரச்னை சுமூகமாக தீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு டிவிஎஸ் நிறுவனம் ஃப்ளேம் என்ற புதிய 125 சிசி பைக் மாடலை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கின் எஞ்சினில் சிசிடிவிஐ என்ற நவீன தொழில்நுட்ப அம்சம் கொடுக்கப்பட்டு இருந்தது. டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த சிசிடிவிஐ என்ற தொழில்நுட்பமானது தங்களது காப்புரிமை பெறப்பட்ட டிடிஎஸ்ஐ (Digital Twin Spark Ignition- DTS-i) தொழில்நுட்பத்தை காப்பிடியத்து டிவிஎஸ் உருவாக்கி இருப்பதாக பஜாஜ் ஆட்டோ குற்றம்சாட்டியது.

பஜாஜ் ஆட்டோவின் டிடிஎஸ்ஐ தொழில்நுட்பத்தின் மூலமாக எரிபொருள் அதிகபட்சம் எரிக்கப்படுவதற்கான சாத்தியமும், அதி செயல்திறனையும் எஞ்சின் வழங்கும். இதையே டிவிஎஸ் காப்பிடித்து பயன்படுத்திவிட்டதாக பஜாஜ் ஆட்டோ வெகுண்டு எழுந்தது.

அத்துடன், டிவிஎஸ் மீது பஜாஜ் ஆட்டோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த பிரச்னை தொடர்பாக, மும்பை நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் இலங்கை, மெக்சிகோ நாடுகளிலும் காப்புரிமை மீறல் தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த குற்றச்சாட்டை டிவிஎஸ் மோட்டார் மறுத்ததுடன், பஜாஜ் ஆட்டோவுக்கு எதிராக ரூ.250 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கும் தொடர்ந்தது. அதாவது, பஜாஜ் நிறுவனத்தின் டிடிஎஸ்ஐ தொழில்நுட்பம் கொண்ட எஞ்சின்களில் இரண்டு வால்வுகள் மட்டுமே உள்ளதாகவும், தங்களது சிசிடிவிஐ எஞ்சின்களில் மூன்று வால்வுகள் கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தது.

இதுதொடர்பாக, நீதிமன்றத்தில் பஜாஜ் ஆட்டோ அளித்த பதிலில், டிவிஎஸ் நிறுவனத்தின் மூன்றாவது வால்வு கொடுக்கப்பட்டு இருப்பது ஒப்புக்குத்தான் என்றும், அதனால் பயன் ஒன்றும் இல்லை. தங்களது டிடிஎஸ்ஐ தொழில்நுட்பத்தையே காப்பிடியத்துள்ளதாக வாதத்தை வைத்தது.

இதுதொடர்பாக, 12 ஆண்டுகளாக வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த பிரச்னையை நீதிமன்றத்திற்கு வெளியே சுமூகமாக முடித்துக் கொண்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நிறுவனங்களும் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்துள்ளன. மேலும், இரு நிறுவனங்களும் எந்த நஷ்ட ஈட்டையும் மற்றொரு நிறுவனத்திற்கு தர வேண்டாம் என்றும் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால், 12 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதனால், தொடர்ந்து டிடிஎஸ்ஐ தொழில்நுட்பத்தை பஜாஜ் ஆட்டோ தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்றும், அதனாலேயே இந்த வழக்கால் இனி எந்த பயனும் இல்லை என்பதால் சுமூகமாக தீர்த்துக் கொள்ள இரு நிறுவனங்களும் முடிவு செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








