"பொறியியல் படிப்பில்லை, தொழிற்சாலை இல்லை" சொந்தமாக மின்சார சைக்கிளை உருவாக்கிய விவசாயி!
பொறியியல் படிப்பு, சொந்தமாக தொழிற்சாலை என எதுவுமே இல்லாமல் விவசாயி ஒருவர் சொந்தமாக பேட்டரியால் இயங்கும் சைக்கிளை தயாரித்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

நாட்டின் மிகப்பெரிய தேடல்களில் ஒன்றாக மின்சார வாகனம் மாறியுள்ளது. இவை, எரிபொருள் வாகனங்களைப் போன்று அல்லாமல் சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக செயல்படும்.
இதன்காரணமாக, இந்தியா முழுவதும் மின்வாகனங்களை ஆளுகை செய்கின்ற வகையிலான முயற்சிகள் அண்மைக் காலங்களாக தீவிரபடுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மானியம் வழங்குதல் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஒடிசா மாநிலம், பவுத் பகுதியில் உள்ள பமந்தா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது சொந்த முயற்சியில் சாதாரண மிதிவண்டியை, பேட்டரியால் இயங்கும் இ-சைக்கிளாக மாற்றியமைத்துள்ளார்.

அவரின் பெயர் திலிப் மொஹபத்ரா என தெரிவந்துள்ளது. இவர், விவசாயத்தை மட்டுமே தொழிலாக நம்பியுள்ளார். ஆட்டோமொபைல் துறையைப் பற்றி எதுவும் அறியாத இவர், மிகவும் மலிவான விலையில் ஓர் பேட்டரி சைக்கிளை உருவாக்கியுள்ளார்.
இதற்காக அவர் தனியாக தொழிற்சாலையையோ அல்லது அதற்கு தேவையான எந்தவொரு உபகரணத்தையே கையாளவில்லை.

ஆனால், தன்னால் எந்தவொரு காரியத்தையும் எளிதில் செய்துகாட்ட முடியும் என்பதை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த முயற்சியை செய்து காட்டியுள்ளார்.
விவசாயியின் இந்த அதீத திறனை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டு வகையில் உள்ளூர் டிவி சேனலான ஓம்காம், அதுகுறித்த செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சாதாரணமாக ஓர் பேட்டரியால் இயங்கும் சைக்கிளை வாங்க வேண்டுமானால், குறைந்தது ரூ. 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். ஏன், நம் நாட்டில் கார்களுக்கு இணையான தொகையில் கூட மின்சார சைக்கிள்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி திலிப் மொஹபத்ரா, தற்போது உருவாக்கியுள்ள சைக்கிளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை மட்டுமே செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அதேசமயம், மிகப்பெரிய நிறுவனங்களின் பிராண்டு பெயரில் விற்பனையாகும் இ-சைக்கிள்களுக்கு நிகரான திறனை, விவசாயியின் இந்த முயற்சியால் மின்சார சைக்கிளாக அவதாரம் எடுத்துள்ள சைக்கிளும் வழங்குகின்றது.
அந்தவகையில், அது அதிகபட்சமாக மணிக்கு 30 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது. அத்துடன், ஒரு முழுமையான சார்ஜில் 80 கிமீ தூரம் செல்லும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 4-5 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும்.

இதற்காக அவர், 12 வோல்ட் திறன் கொண்ட பேட்டரியையும் 35 வாட் திறன் கொண்ட மின் மோட்டாரையும் அவர் பயன்படுத்தியுள்ளார். இதனை டெல்லியில் உள்ள தனியார் மின்வாகன விற்பனையகத்தில் வாங்கியதாக அவர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். அத்துடன், சைக்கிளுக்கு தேவையான ஆக்ஸலேட்டர், வேகக்கட்டுப்பாடு கருவி மற்றும் மின் விளக்கு உள்ளிட்டவற்றையும் அவர் தனியார் கடைகளிலேயே வாங்கியுள்ளார்.

இந்த உருமாற்றம் பெற்ற சைக்கிள் திலிப் மொஹபத்ராவின் இயலாத காலத்தில் நல்ல பயனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் அவதிபட்டு வந்த அவர், இந்த சைக்கிள் வந்த பின்னர் அவையனைத்தும் எளிதாக மாறியுள்ளது என பெருமிதம் கொள்கின்றார்.

அதேசமயம், இந்த சைக்கிளால் அவர் பலனடைவது மட்டுமின்றி மற்ற ஏழை, எளிய முதியோர்களுக்கும் லிஃப்ட் கொடுத்து உதவி புரிந்து வருகின்றார். மேலும், முந்தையக் காலங்களைக் காட்டிலும், தற்போது சற்று வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் அவர் செயல்பட்டு வருகின்றார்.

மொஹபத்ராவின் இந்த சைக்கிளை இயக்க பதிவெண், ஆர்சி புக், லைசென்ஸ் என எதுவும் தேவையில்லை. அதேபோன்று, ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. ஆனால், நம்முடைய பொதுநலனுக்காக பாதுகாப்பு கவசங்களைப் பயன்படுத்துவது அவசியம் ஆகும்.

திலிப் மொஹபத்ரா இந்த முயற்சிக்கு தூண்டுகோலாக அமைந்திருப்பது, அவரின் ஊரில் பேருந்து வசதி போதுமானதாக இல்லாததே முக்கிய காரணமாக இருக்கின்றது. தன்னுடைய கிராமத்தில் இருந்து மற்ற பகுதிக்குச் செல்ல மிதிவண்டி சைக்கிளையே அவர் நம்பியிருந்தார். இதனால், பெரும் சிரமத்திற்கும் ஆளாகி வந்தார். எனவே, இதனை சுலபமாக்கிக் கொள்ளும் விதமாக, சாதாரண சைக்கிளை, மின்சார சைக்கிளாக உருமாற்றியுள்ளார்.

அவர், தான் மட்டும் இந்த பலனை அனுபவிக்காமல், தன்னுடைய ஊர் மக்களும் இந்த பலனை அடைய விரும்புகின்றார். இதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகின்றார். ஆனால், அவருடைய நிதி பற்றாக்குறை அவருக்கு பெரும் தடையாக இருப்பது வருத்தமளிக்கும் வகையில் உள்ளது.


Click it and Unblock the Notifications








