மலைக்க வைக்கும் ஹோண்டா டீலர்ஷிப்கள் எண்ணிக்கை... இது எத்தனையாவது ஷோரூம் தெரியுமா?
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தனது ஆயிரமாவது டீலர்ஷிப்பை திறந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூர் என்ற இடத்தில், பிளாட்டினம் ஹோண்டா எனப்படும் ஹோண்டா நிறுவனத்தின் 4எஸ் டீலர்ஷிப் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதில், 4எஸ் என்பது சேல்ஸ், சர்வீஸ், ஸ்பேர்ஸ், சேப்டி (Sales/Service/Spares/Safety) என்பதை குறிக்கிறது. ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் (HMSI-Honda Motorcycle and Scooter India Pvt. Ltd), அங்கீகாரம் பெற்று இந்தியாவில் திறக்கப்பட்டுள்ள ஆயிரமாவது டீலர்ஷிப் இதுவாகும்.

இதுகுறித்து ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், ''டூவீலர் மார்க்கெட்டில் தனது நெட்வொர்க் பலத்தை இரண்டு மடங்காக அதிகரித்த ஒரே நிறுவனம் ஹோண்டாதான். கடந்த 5 ஆண்டுகளில் 3,300 புதிய டச் பாயிண்ட்கள் (Touch Points) திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது ஹோண்டாவின் நெட்வொர்க் பலம் 6 ஆயிரமாக (டீலர்ஷிப்கள் மற்றும் டச் பாயிண்ட்கள்) உள்ளது.

இதன்மூலம் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. சேல்ஸ், சர்வீஸ், ஸ்பேர்ஸ் மற்றும் சேப்டி என்ற 4எஸ் சேவையை அனைத்து ஹோண்டா டீலர்ஷிப்களும் வழங்கி வருகின்றன'' என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மினோரு கட்டோ கூறுகையில், ''ஆயிரமாவது ஹோண்டா டீலர்ஷிப் திறப்பு விழாவில் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முக்கியமான மைல்கல்லானது, ஹோண்டா நிறுவனத்தை வாடிக்கையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது'' என்றார்.

இதனிடையே தனது வாடிக்கையாளர்களுக்கு 6,000 நெட்வொர்க் டச் பாயிண்ட்கள் என்ற வாக்குறுதியை ஹோண்டா நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இறுதியில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீலர்ஷிப்கள் மற்றும் வாடிக்கையாளர் டச் பாயிண்ட்கள் என்ற அடிப்படையில் ஹோண்டா நிறுவனத்தின் நெட்வொர்க் இந்தியா முழுக்க பரந்து விரிந்து காணப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் எவ்வளவு தரம் வாய்ந்தது, விற்பனைக்கு பிந்தைய அவர்களது வாடிக்கையாளர் சேவை எப்படி இருக்கும் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

முன்னதாக ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் புதிய சிபி300ஆர் (Honda CB300R) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் எக்ஸ் ஷோரூம் விலை 2.41 லட்ச ரூபாய். இந்த மோட்டார் சைக்கிளில், 286 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கில், ப்யூயல் இன்ஜெக்ஸன், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கேடிஎம் ட்யூக் 250 (KTM Duke 250) உள்ளிட்ட மாடல்களுடன் சிபி300ஆர் போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








