ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ பயணம்... இந்தியாவை புரட்டி போட வருகிறது புதிய எலெக்ட்ரிக் பைக்...
ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர்கள் பயணிக்க கூடிய புதிய எலெக்ட்ரிக் பைக் வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஆனால் வளர்ச்சியடைந்த ஒரு சில நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய மார்க்கெட்டில் இன்னும் குறிப்பிடத்தகுந்த வகையில் எலெக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம் செய்யப்படவில்லை. அந்த குறையை போக்க வெகு விரைவில் இந்தியாவிற்கு வருகிறது எனர்ஜிகா மோட்டார் கம்பெனி (Energica Motor Company).

இது இத்தாலியை சேர்ந்த பைக் உற்பத்தி நிறுவனம் ஆகும். குறிப்பாக எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளை தயாரிப்பதில், எனர்ஜிகா மோட்டார் கம்பெனி நிபுணத்துவம் பெற்று விளங்குகிறது. சர்வதேச சந்தையில் தற்போதைய நிலையில், மூன்று எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளை எனர்ஜிகா மோட்டார் கம்பெனி விற்பனை செய்து வருகிறது.

அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், தென் ஆப்ரிக்கா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட மார்க்கெட்களில் அந்த மூன்று எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக எனர்ஜிகா நிறுவனம் தற்போது இந்திய மார்க்கெட்டை குறி வைத்துள்ளது. இந்திய சந்தையில், எனர்ஜிகா மோட்டார் கம்பெனி வெகு விரைவில் தனது கால் தடத்தை பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனர்ஜிகா மோட்டார் கம்பெனியை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இது உண்மையானால், இந்திய மார்க்கெட்டில் நுழையும் முதல் முக்கியமான எலெக்ட்ரிக் சூப்பர் பைக் உற்பத்தியாளர் என்ற பெருமையை எனர்ஜிகா மோட்டார் கம்பெனி பெறும். எனர்ஜிகா மோட்டார் கம்பெனி இத்தாலியின் மோடெனா நகரை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது.

எனர்ஜிகா மோட்டார் கம்பெனியின் இந்திய வருகை குறித்த அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால் ஆசியாவிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். எனவே எங்கள் பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்யும் வாய்ப்பை பெற வேண்டும் என விரும்புகிறோம்.

ஆனால் இந்தியாவில் எங்கள் பைக்குகளின் விற்பனையை தொடங்குவது தொடர்பாக நாங்கள் எந்தவொரு காலக்கெடுவையும் நிர்ணயம் செய்யவில்லை. எனினும் 2020ம் ஆண்டின் இறுதி அல்லது 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் இருப்பதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம்'' என்றார். எனர்ஜிகா மோட்டார் கம்பெனியின் வருகை குறித்த தகவல் இந்தியர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மெல்ல மெல்ல பிரபலமடைந்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களை மக்களின் பயன்பாட்டிற்கு அதிக அளவில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

மத்திய அரசு வழங்கி வரும் இந்த ஆதரவு காரணமாக, முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் போட்டி போட்டு கொண்டு இந்திய மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யும் முயற்சிகளை தொடங்கியுள்ளன. மேலும் ஒரு சில வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய சந்தையில் கால் பதிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.

எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் உலக அளவில் தலை சிறந்து விளங்கும் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் வெகு விரைவில் இந்தியாவில் கால் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில்தான் எனர்ஜிகா மோட்டார் கம்பெனியின் இந்திய வருகை குறித்த தகவல்கள் வெளியாகி, இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன.

எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளாக இருப்பதால், எனர்ஜிகா மோட்டார் கம்பெனியின் மூன்று தயாரிப்புகளும் லக்ஸரி தயாரிப்புகளாகவே கருதப்படுகின்றன. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இவற்றின் விலை கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலை அதிகம் என்றாலும், அதற்கேற்ப மிகச்சிறப்பான பெர்ஃபார்மென்ஸை எனர்ஜிகா சூப்பர் எலெக்ட்ரிக் பைக்குகள் கொடுக்கும்.

பெர்ஃபார்மென்ஸ் மட்டுமல்லாது ரேஞ்ச் விஷயத்திலும் எனர்ஜிகா எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகள் அசத்த கூடியவை. இதற்கு எனர்ஜிகா இகோ ப்ளஸ் (Energica Ego+) எலெக்ட்ரிக் சூப்பர் பைக்கை ஒரு உதாரணமாக சொல்லலாம். இந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 240 கிலோ மீட்டர்கள் வரையிலான வேகத்தை எட்டக்கூடிய திறன் வாய்ந்தது.

ஒரு எலெக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு இந்தளவிற்கு இருப்பது சிறப்பான விஷயம்தான். அதே சமயம் இந்த பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 400 கிலோ மீட்டர்கள் வரை தாராளமாக பயணம் செய்ய முடியும். எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்குவதில் வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டுவதற்கான காரணமே குறைவான ரேஞ்ச்தான்.

ஆனால் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என்பதால், தினசரி பயன்பாட்டிற்கு மட்டுமின்றி தொலை தூர பயணங்களுக்கும் உகந்ததாக எனர்ஜிகா இகோ ப்ளஸ் இருக்கும். இந்த பைக்கில் 145 எச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 107 kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 18.9 kWh லித்தியம் பாலிமர் பேட்டரி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இந்திய மார்க்கெட்டில் எனர்ஜிகா மோட்டார் கம்பெனிக்கு சரி நிகரான போட்டியாளர்கள் யாரும் தற்போதைய நிலையில் இல்லை. எனவே அந்நிறுவனத்திற்கு இந்தியாவில் சிரமங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் வேண்டுமானால் எனர்ஜிகா எலெக்ட்ரிக் சூப்பர் பைக்குகளுக்கு போட்டியாக இந்திய மார்க்கெட்டில் புதிய தயாரிப்புகள் களமிறக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








