புத்தம் புதிய ஜாவா பைக் குறித்த அறிவிப்பு வெளியானது... ராயல் என்பீல்டு பதற்றம் அடைய காரணம் இதுதான்..
வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த புத்தம் புதிய ஜாவா பைக் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ராயல் என்பீல்டு நிறுவனம் பதற்றம் அடைந்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். கேடிஎம், யமஹா, சுஸுகி, ஹோண்டா மற்றும் டுகாட்டி உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு (Sports Bikes) என இங்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், ராயல் என்பீல்டு மற்றும் ஜாவா போன்ற நிறுவனங்களின் ரெட்ரோ-கிளாசிக் (Retro-Classic) லுக் மோட்டார் சைக்கிள்களுக்கும் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால் தனக்கென பல உயிர் ரசிகர்களை கொண்டுள்ள ஜாவா பைக்குகளின் உற்பத்தி, இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் ஜாவா மோட்டார் சைக்கிள் பிரியர்கள் விரக்தியில் நொந்து போயினர் என்றே சொல்லலாம்.

என்றாலும் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி, ஜாவா மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் ஜாவா பைக்குகள் ரீ-லான்ச் ஆனதால், அதன் நேரடி போட்டியாளரான ராயல் என்பீல்டு அதிர்ச்சியில் உறைந்தது.

ஆனால் ஜாவா பைக் பிரியர்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். இதற்கென நடைபெற்ற மிக பிரம்மாண்ட விழாவில், ஜாவா (Jawa) மற்றும் ஜாவா 42 (Jawa Forty Two) என்ற பெயர்களில், 2 ரெட்ரோ-கிளாசிக் ரக மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

அதே சமயம் ஜாவா பெராக் (Jawa Perak) என்ற பாபர் ஸ்டைல் கஸ்டம் மோட்டார் சைக்கிளும் அப்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மோட்டார் சைக்கிள் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவில்லை. வெறுமனே காட்சிக்கு மட்டுமே வைக்கப்பட்டிருந்தது.

ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மோட்டார் சைக்கிள்களின் விற்பனையில் அதிக கவனம் செலுத்த உள்ளதால், ஜாவா பெராக் மோட்டார் சைக்கிள் எப்போது விற்பனைக்கு கிடைக்கும்? என்ற தகவல் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜாவா பெராக் மோட்டார் சைக்கிளின் விலை 1.89 லட்ச ரூபாய். ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய 2 பைக்குகளை காட்டிலும் இதன் விலை அதிகம் ஆகும். ஜாவா பைக்கின் விலை ரூ.1.64 லட்சம், ஜாவா 42 பைக்கின் விலை ரூ.1.55 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

விலை அதிகம் என்பதற்கு ஏற்ப, ஜாவா பெராக் மோட்டார் சைக்கிள் அதிசக்தி வாய்ந்தது. ட்யூயல் சேனல் ஏபிஎஸ் உள்பட பல்வேறு கூடுதல் வசதிகளையும் பெற்றுள்ளது. ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய மோட்டார் சைக்கிள்களில், 293 சிசி இன்ஜின் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஜாவா பெராக் மோட்டார் சைக்கிளில் இதைக்காட்டிலும் அதிக திறன் வாய்ந்த 334 சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெரிய இன்ஜின் 30 பிஎச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

இந்த சூழலில் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டும் ஆன்லைனில் புக்கிங் தொடங்கியது. பலர் போட்டி போட்டு கொண்டு புக்கிங் செய்தனர்.

இதன் காரணமாக 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இவ்விரு மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் முடிந்து விட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. ஆனால் ஜாவா பெராக் மோட்டார் சைக்கிளுக்கான புக்கிங் தேதி குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்த சூழலில், பெராக் மோட்டார் சைக்கிளுக்கு புக்கிங் தொடங்குவது எப்போது? என்ற தகவலை, ஜாவா பைக்குகளை இந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்த கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அனுபம் தரேஜா தற்போது வெளியிட்டுள்ளார்.

இதன்படி ஜாவா பெராக் பைக்கிற்கான புக்கிங், நடப்பாண்டு இறுதியில் தொடங்கும் என அனுபம் தரேஜா அறிவித்துள்ளார். எனவே அனேகமாக வரும் செப்டம்பர் வாக்கில் புக்கிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலால், நீண்ட நாட்களாக பெராக் பைக்கை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆர்வலர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே சமயம் ஜாவாவின் போட்டியாளரான ராயல் என்பீல்டு அதிர்ச்சியடைந்திருக்க கூடும்.

ஏனெனில் ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய பைக்குகளுக்கான புக்கிங் தொடங்கிய உடனேயே ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள்களின் விற்பனை சரிந்து விட்டது. இந்த சூழலில் ஜாவா பெராக் பைக்கிற்கான புக்கிங்கும் தொடங்கினால், ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








