புதிய மாடல்கள் வருகை... இந்தியாவில் பைக் உற்பத்தியை அதிகரிக்க கேடிஎம் திட்டம்
புதிய மாடல்கள் அறிமுகத்தை வைத்து இந்தியாவில் பைக் உற்பத்திக்கான புதிய இலக்கை கேடிஎம் நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் பஜாஜ் ஆட்டோவின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கேடிஎம் பைக்குகளுக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. அந்நிறுவனம் ட்யூக் மற்றும் ஆர்சி என்ற இரண்டு வகைகளில் பைக்குகளில் விற்பனை செய்கிறது.

இதில், ட்யூக் என்பது நேக்கட் ரக பைக் மாடல்களாகவும், ஆர்சி வரிசையில் ஃபேரிங் பேனல்கள் கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக மாடல்களாகவும் இருக்கின்றன. ட்யூக் வரிசைக்குத்தான் அதிக வரவேற்பு இருக்கிறது. இதனால், ட்யூக் வரிசையில் 125, 200, 250, 390 மற்றும் 790 ஆகிய மாடல்களையும் ஆர்சி வரிசையில் ஆர்சி 125, 200 மற்றும் 390 மாடல்களையும் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், விரைவில் அட்வென்ச்சர் ரகத்தில் 250 மற்றும் 390 மாடல்களை அந்நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. இந்த இரண்டு பைக்குகளும் கோவாவில் நடைபெற இருக்கும் இந்திய பைக் வீக் திருவிழாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று, தனது கட்டுப்பாட்டில் செயல்படும் ஹஸ்க்வர்னா பிராண்டு பைக்குகளையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஹஸ்க்வர்னா பிராண்டில் விட்பிளேன் 401 மற்றும் ஸ்வர்ட்பிளேன் 401 ஆகிய இரண்டு மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ஹஸ்க்வர்னா 401 பைக் மாடல்கள் இரண்டுமே கேடிஎம் 390 பைக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. எஞ்சின் உள்ளிட்ட பல முக்கிய பாகங்களை பங்கிட்டுக் கொள்ளும். டிசைனில் மட்டும் வேறுபடும். கேடிஎம் பைக்குகள் போன்றே, ஹஸ்க்வர்னா பைக் மாடல்களும் தனித்துவமான ஸ்டைலிங்கில் இந்தியர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய மாடல்களின் வருகையின் அடிப்படையில் தனது பைக் உற்பத்தியை ஆண்டுக்கு இரண்டு லட்சம் என்ற இலக்கை அடைவதற்கான திட்டத்தை கேடிஎம் கையில் எடுத்துள்ளது. அதாவது, 2022ம் ஆண்டுக்குள் தற்போதுள்ள பைக் உற்பத்தியை இரு மடங்கு வரை உயர்த்துவதற்கான திட்டங்களை கேடிஎம் செயல்படுத்த உள்ளது.
Via- IAB


Click it and Unblock the Notifications








