2 புதிய ஸ்கூட்டர் மாடல்களுடன் இந்தியாவில் களமிறங்கும் லம்ப்ரெட்டா!
இந்தியாவில் 2 புதிய ஸ்கூட்டர் மாடல்களுடன் வர்த்தகத்தை துவங்குவதற்கு லம்ப்ரெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த லம்ப்ரெட்டா ஸ்கூட்டர் நிறுவனம் 1950களில் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கியது. 1972ல் லம்ப்ரெட்டா பிராண்டை ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியது. அதுமுதல் இந்தியர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தது. இந்தநிலையில், புதிய பிராண்டுகளின் வரவால் 1997ல் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில், ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருப்பதை கண்டு, இந்தியாவில் மீண்டும் கால் பதிக்க லம்ப்ரெட்டா முடிவு செய்தது. கடந்த ஆண்டு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது.

இந்த நிலையில், மும்பை அருகே ஆலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. ஆனால், ஆலைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதா என்பது குறித்த தகவல் இல்லை. இங்கு உற்பத்தி செய்யப்படும் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்கள் இந்திய சந்தை மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

இந்த சூழலில், இரண்டு பைக்குகளுடன் இந்திய சந்தையில் கால் பதிப்பதற்கு லம்ப்ரெட்டா திட்டமிட்டுள்ளதாக பைக் அட்வைஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

முதல் மாடலானது பேட்டரியில் இயங்கும் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டராக வர இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மின்சார ஸ்கூட்டரை லம்ப்ரெட்டா அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மின்சார ஸ்கூட்டரின் உருவாக்கப் பணிகள் இத்தாலியின் மிலன் நகரில் உள்ள லம்ப்ரெட்டா வடிவமைப்பு மையத்தில் நடந்து வருகிறது.

இரண்டாவது மாடலாக சூப்பர் லமம்ப்ரெட்டா என்ற திறன்மிக்க உயர்ரக ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மாடலானது தோற்றத்திலும், செயல்திறனிலும் சிறப்பான மாடலாக இருக்கும்.
இந்த ஸ்கூட்டர் வெஸ்பா பிராண்டை குறிவைத்து களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே, விலையிலும் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும். இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டை மீண்டும் லம்ப்ரெட்டா கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Bikeadvice


Click it and Unblock the Notifications








