கார்களை தொடர்ந்து மின்சார ஸ்கூட்டரை களமிறக்கும் மஹிந்திரா... இதன் சிறப்பு என்ன தெரியுமா...?
மஹிந்திரா நிறுவனம், எலெக்ட்ரிக் கார்களைத் தொடர்ந்து அட்டகாசமான இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் மஹிந்திரா நிறுவனம், நாட்டில் இரண்டு மற்றும் நான்குசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. அதேசமயம், இந்நிறுவனம் இலகுரக வாகனங்கள் மட்டுமின்றி கனரகம் மற்றும் விவசாயப் பணிக்கு தேவையான வாகனங்களையும் உற்பத்திச் செய்து வருகின்றது.

இந்நிலையில், மஹிந்திரா நிறுவனம் நாட்டின் தேவையுணர்ந்து மின் வாகன தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.
முன்னதாக, மூன்று புதிய அட்டகாசமான எலெக்ட்ரிக் கார்களை இனி வரும் வருடங்களில் தொடர்ச்சியாக களமிறக்க இருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் பவன் கோயன்கா அறிவித்திருந்தார்.

அந்தவகையில், மஹிந்திரா இ-கேயூவி100 எலக்ட்ரிக் ரக காரை 2019ம் ஆண்டின் இறுதிக்குள்ளும், இ-எக்யூவி300 மாடலை 2020ம் ஆண்டிற்குள்ளும் சந்தைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறவித்திருந்தார். இத்துடன், மூன்றாவது மாடலை ஃபோர்டு நிறுவனத்தின் அஸ்பயர்ட் கார் எலெக்ட்ரிக் காராக தயாரித்து மஹிந்திரா பேட்ஜில் 2021ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் அறிவித்தார்.

இந்நிலையில், எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகன சந்தை மட்டுமின்றி இரண்டு சக்கர வாகன சந்தையிலும், மஹிந்திரா நிறுவனம் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை மணி கன்ட்ரோல் என்ற ஆங்கில தளம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின்கீழ் இயங்கி வரும் ஜென்ஸே (GenZe) பிராண்டில் இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.
ஜென்ஸே நிறுவனம், அமெரிக்காவின கலிஃபோர்னியா மாகாணத்தை தலைமையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். இது, மின்சாரம் சார்ந்த இ-பைக் மற்றும் இ-ஸ்கூட்டர்கள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து வருகின்றது.

அந்தவகையில், ஜென்ஸே நிறுவனம் தயாரித்து வரும் ஜென்ஸே 2.0 மற்றும் ஜென்ஸே 2.0எஸ் ஆகிய இரு மாடல்களைதான் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் களமிறக்க இருப்பதாக மஹிந்திரா வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

சுற்றுப்புறச் சூழலின் நண்பனாக பார்க்கப்படும் இந்த ஜென்ஸே ஸ்கூட்டர்கள் ஜூரோ எமிஸனை வெளிப்படுத்தும் வகையில் உற்பத்திச் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அதற்கேற்ப வகையில், இந்த ஸ்கூட்டர் இயங்குவதற்காக 1.6kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.

ஜென்ஸே நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டரை, கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில்தான் மஹிந்திரா நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்தது.

ஜென்ஸேவின் இந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் ஒன்றிற்கு ஒன்று மாறுபட்ட தோற்றத்தில் காணப்படுகின்றன. ஆனால், அது பெரியளவிலான வித்தியாசத்தைப் போன்று காட்சியளிக்கவில்லை. ஆனால், இவற்றின் ரேஞ்ச் மற்றும் பேட்டரி பேக் மட்டும் முழுமையான வித்தியாசத்தைப் பெற்றிருக்கின்றது.

அதேசமயம், இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் டெலிவரி போன்ற கமர்சியல் ரீதியாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகையால், பஜாஜ் எம்80 மற்றும் டிஎஸ் எக்ஸ்எல் வாகனங்களின் இடத்தை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீட் மணிக்கு 48 கிமீ வேகமாக இருக்கின்றது. இதன் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 3.5 மணி நேரங்களே போதுமானதாக உள்ளது. ஆனால், இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் எத்தனை கிமீ தூரம் பயணிக்க முடியும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இது விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தொழில்நுட்ப அம்சமாக 7 இன்ச் டச் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் வேகம், பேட்டரி லெவல், சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ரைடருக்கு வழங்கும்.
இந்தியாவின் எதிர்காலமே எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

அதேசமயம், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வணிகம் சார்ந்த சந்தையில் நல்ல வரவேர்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்த ஆண்டு முடிவு அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








