மஹிந்திரா கஸ்டோ மாடலில் வருகின்றது மின்சார ஸ்கூட்டர்..? பஜாஜ் சேத்தக்கிற்கு செம்ம டஃப் காத்திருக்கு!
பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் மின்சார ஸ்கூட்டருக்கு போட்டியளிக்கின்ற வகையில் மஹிந்திரா நிறுவனம் அதன் கஸ்டோ மாடலிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா அதன் இருசக்கர வாகனத்தில் மின்சார மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இந்நிறுவனம் அதன் நான்கு சக்கர வாகனத்தில் கேயூவி100 மாடலில் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த காரின் சோதனையோட்டமும் அவ்வப்போது சென்னையில் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், மஹிந்திரா நிறுவனம் அதன் இருசக்கர வாகனத்திலும் மின்சார மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், கஸ்டோ மாடலிலான மின்சார வாகனத்தை அது அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த மின்சார ஸ்கூட்டர் 2020ம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான பணியில் மஹிந்திரா நிறுவனம் தற்போது தீவிரம் காட்டி வருகின்றது.

இந்த மின்சார ஸ்கூட்டரை வரும் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால், அதற்கு முன்னதாகவே மஹிந்திரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு விடலாம் என கூறப்படுகின்றது.

ஏற்கனவே, இந்திய வாகன சந்தையில் பஜாஜ், ஏத்தர் உள்ளிட்ட பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவர்களின் புதிய மின்சார வாகனங்களை அறிமுகம் செய்துவிட்டனர்.
ஆகையால், சந்தையில் தற்போதைய அவசர காலத்தை உணர்ந்த மஹிந்திரா மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றது.

இதனடிப்படையிலேயே, கஸ்டோ மாடலிலான மின்சார எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முதலில் அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுமட்டுமின்றி, மஹிந்திரா நிறுவனம் மூன்று சக்கர வாகனத்தில் மின்சார மாடலை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு வருகின்றது.

மஹிந்திரா தற்போது தயாரித்து வரும் மின்சார ஸ்கூட்டரில் 3kW மின் மோட்டார் எதிர்பார்க்கப்படுகின்றது. இதே தரத்திலான மின் மோட்டார்தான் மஹிந்தரிா ஜென்ஸே மற்றும் பிஜோ இ லூதிக்ஸ் ஆகிய மின்சார ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக மணிக்கு 55 முதல் 60 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டது.

மேலும், இந்த ஸ்கூட்டர் ஒரு முழுமையான சார்ஜில் 80 கிமீ வரை செல்லுகின்ற பேட்டரி பேக்கினைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்துடன், இந்த ஸ்கூட்டரின் உற்பத்திக்கு அராய் சான்று வழங்கிவிட்டதாகவும், அது மத்திய அரசின் ஃபேம் 2 மானிய திட்டத்தின்கீழ் ரூ. 80 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என்ற வதந்தியும் பரவிய வண்ணம் இருக்கின்றது.

மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே பீஜோ இ லூதிக்ஸ் என்ற மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த ஸ்கூட்டர் பிரத்யேகமாக மேற்கத்திய நாடுகளுக்காக உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆகையால், இந்தியாவிற்கான மின்சார வாகனம் மஹிந்திரா சார்பில் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், கஸ்டோ மாடலிலான மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவிருப்பது மின்வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்திரா இந்த ஸ்கூட்டர் ஏத்தர், பஜாஜ் சேதக், அல்ட்ரா வெயலட் மற்றும் ஆம்பியர் உள்ளிட்ட நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியை வழங்க இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








